200 க்கும் மேற்பட்ட மொழிகளின் மூல மொழி தமிழே: தமிழாய்வு சங்க செயலர் தகவல்
200 க்கும் மேற்பட்ட மொழிகளின் மூல மொழி தமிழே: தமிழாய்வு சங்க செயலர் தகவல்
UPDATED : ஏப் 22, 2011 04:53 PM
ADDED : ஏப் 22, 2011 04:52 PM
'200 க்கும் மேற்பட்ட மொழிகளின் மூல மொழி தமிழ்மொழியே' என்று உலக தமிழாய்வு சங்க தலைவர் சாத்தூர் சேகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : 'உலகம் முழுவதும் தமிழர் ஒன்று சேர வேண்டும். தமிழர் பண்பாடும், நாகரிகமும் வளர வேண்டும். 200க்கும் மேற்பட்ட மொழிகளை ஆராய்ந்ததில் அனைத்துக்கும் மூல மொழி தமிழ்தான்.
முதலில் வட இந்திய மொழியிலிருந்துதான் தமிழ் தோன்றியது என்றனர். ஆனால் கால்டுவெல் தென்னிந்திய மொழிகள் வட இந்திய மொழிகளில் இருந்து தோன்றியது கிடையாது, அது தனித்து இயங்குகிறது என்று ஆய்வு செய்து கூறினார். உலோகத்தை காய்ச்சி அடித்து நாணயத்தை உருவாக்கினார்கள். அதையே ஆங்கிலேயர் 'கேஷ்' என்று கூறினர். 'வாக்கு' என்ற சொல்லிலிருந்து தோன்றியதுதான் 'வாய்ஸ்'. மூலிகை மருத்துவம் குறித்த பெரும்பாலான நூல்கள் தமிழிலேயே உள்ளன. வான சாஸ்திரத்தை கடல் கடந்து வாணிபம் செய்த தமிழர்கள்தான் அதிகம் பயன்படுத்தினர்.
தமிழ் எழுத்துக்கள் முதலில் சித்திர வடிவிலேயே இருந்தன. பிறகுதான் வடிவம் பெற்றன. ஜப்பானியர்களே தமிழ் எங்கள் மூல மொழி என்று கூறுகின்றனர். எல்லா மொழிகளும் ஒரு மொழியிலிருந்து படைக்கப்பட்டதுதான். அந்த வகையில் தமிழே அனைத்து மொழிகளுக்கும் முதலான மொழி. ஆஸ்திரேலிய பழங்குடியினர் இன்றைக்கும் தமிழ் சொற்களை பயன்படுத்தி வருகின்றனர். கவிஞர்கள் 'உலகெலாம்' என்ற சொற்களை தங்கள் செய்யுட்களில் பயன்படுத்தி வந்தனர். இதிலிருந்தே தமிழ் உலகெல்லாம் பரவியிருந்ததை அறிய முடிகிறது. வருகிற 23ம் தேதி உலக தமிழாய்வு சங்கம் சார்பில் முதலாவது மாநாடு மதுரையில் நடக்கிறது. இதில் விஞ்ஞானத்தில் தமிழன், தமிழ் இலக்கணம், மொழி ஒப்பாய்வு மற்றும் பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பேசுகின்றனர்', என்றார்.
