ADDED : டிச 13, 2019 10:55 PM

தஞ்சாவூர்: கணவர் கொலை வழக்கில், சரவணபவன் ஓட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதிக்க காரணமாக இருந்த, ஜீவஜோதி, பா.ஜ.,வில் சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சையைச் சேர்ந்த ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், ஓட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் மீது, புகார் அளித்தார் ஜீவஜோதி. தொடர்ந்து, 20 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி, ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்தார்.தற்போது, தஞ்சை, ரஹ்மான் நகரில், மகளிர் தையலகம் நடத்தி வரும் அவர், பா.ஜ.,வில் சேர இருப்பதாகவும், அதற்கான பேச்சு முடிந்து விட்டதாகவும், பா.ஜ., வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இது குறித்து, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் ஜீவஜோதி, நெருக்கமானவர்களிடம் மட்டும் அதைப் பற்றி விவாதிப்பார். கடந்த வாரம், பா.ஜ., பொதுச் செயலர் வானதி சீனிவாசனை சந்தித்த ஜீவஜோதி, பல்வேறு விவகாரங்கள் பற்றி பேசியுள்ளார். ஒரு வாரத்தில், அவர் கட்சியில் இணையப் போவதாகவும், அதன் பின், அவருக்கு முக்கிய பதவி கொடுக்க இருப்பதாகவும் தெரிகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.