இலக்கியத்தில் யானைக்கு பல பெயர்கள்: கண்காட்சி அரங்கில் தகவல்
இலக்கியத்தில் யானைக்கு பல பெயர்கள்: கண்காட்சி அரங்கில் தகவல்
ADDED : ஜூன் 24, 2010 11:36 PM

கோவை: செம்மொழி மாநாட்டின் கண்காட்சி அரங்கில், "பழங்கால இலக்கியங்களில் கானுயிரும் கானகமும்' என்ற பெயரில் வழங்கப்படும் தகவல்களும் பொருட்களும் காண்பவரின் விழிகளை விரியச் செய்கின்றன.
வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்கில், சங்கத் தமிழ் இலக்கியத்தில் யானை, 12 பெயர்களால் அறியப்பட்டதாக கூறப்பட்டுள்ள தகவல் ஆச்சரியம் அளிக்கிறது.
மாவட்ட வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அரங்கில், தமிழகத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் பழங்குடி மக்கள் பயன்படுத்திய பல்வேறு அரிவாள்கள், அம்புகள், வேட்டைக் கருவிகள், மூங்கில் வில், பிரம்பு அம்புகள், உலோக முனை பிரம்பு அம்புகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட வில் மூங்கில், விதம் விதமான கோடரிகளைப் பற்றி வன அருங்காட்சியக காப்பாளர் சந்திரசேகரன் கூறுகையில், ""இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆயுதமும் பயங்கர தன்மை கொண்டவை. ஆழமாக குத்தும் அம்பை வெளியே இழுத்தால், மொத்த சதையையும் கிழித்து கொல்லும் ரகத்தை சேர்ந்தவை. எங்கும் காணக் கிடைக்காத இந்த அரிய பொருட்கள் பற்றி புறநூனூறில் சான்றுகள் உள்ளன,'' என்றார்.
யானைக்கு பல பெயர்கள்: தமிழ் சங்க இலக்கியங்களில் யானை, வேழம், களிறு, பிடி, களபம், மாதங்கம், கைம்மா, உம்பர், வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அறுபடை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு ஆகிய பெயர்களால் அறியப்பட்டதாக இந்த அரங்கில் அளிக்கப்படும் தகவல் ஆச்சரியம் அளிக்கிறது. இத்துடன் வனங்கள் அழியாமல் பாதுகாப்பது எப்படி, மரத்தை வெட்டுவதால் சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் விதம் ஆகியவற்றைப் பற்றி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
