தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கடலை எண்ணெய் லிட்டருக்கு விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு

கடலை எண்ணெய் லிட்டருக்கு விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு

கடலை எண்ணெய் லிட்டருக்கு விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு


UPDATED : ஆக 12, 2010 10:23 AM

ADDED : ஆக 11, 2010 11:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2010 10:23 AM ADDED : ஆக 11, 2010 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : கடலை எண்ணெய் விலை லிட்டருக்கு 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.

நிலக்கடலை, சூரியகாந்தி விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவு காரணமாக கடலை எண்ணெய் விலை கிடு கிடு என உயர்ந்துள்ளது.தமிழகத்தில், கடந்த 10 நாட்களில் எட்டு முறை எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மாநிலத்தில் நிலக்கடலை, சூரியகாந்தி விளைச்சல் பாதிப்பு மற்றும் முற்றிலும் வரத்து நின்று விட்டதால், நிலக்கடலை குவிண்டாலுக்கு 600 ரூபாயும், சூரியகாந்தி விதை 400 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.



இந்த உயர்வுடன் மின் கட்டண உயர்வும் சேர்ந்து, எண்ணெய் விலையில் எதிரொலித்துள்ளது. இதன் விளைவால், நாள்தோறும் எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டு, விலை 'கிடு கிடு' வென உயர்ந்து வருகிறது. கடந்த ஜூலை கடைசி வாரம் 76 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் கடலை எண்ணெய், 20 ரூபாய் அதிகரித்து, 96 ரூபாயாகவும், 1,140 ரூபாய்க்கு விற்ற 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட டின் 1,440 ரூபாய்க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது. கடலை எண்ணெய், ரீபைண்டு லிட்டருக்கு 15 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனையானது. 1,365 ரூபாய்க்கு விற்ற 15 லிட்டர் டின் நேற்று 1, 500 ரூபாயாக எகிறியது. சூரியகாந்தி எண்ணெயின் விலை 18 ரூபாய் உயர்ந்து, 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 15 லிட்டர் கொண்ட டின் 825 ரூபாயிலிருந்து, 1,050 ரூபாய்க்கு விற்பனையானது. ஜூலை கடைசி வாரத்தில், 43 ரூபாய்க்கு விற்பனையான பாமாயில், 13 ரூபாய் அதிகரித்து, 53 ரூபாய்க்கு விற்கிறது.



 



இந்த விலையேற்றம் குறித்து, எண்ணெய் வியாபாரி கிருஷ்ணன் கூறியதாவது: எண்ணெய் மூலப்பொருட்களான நிலக்கடலை, சூரியகாந்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த வியாபாரிகள், விலை உயர்வை எதிர்பார்த்து அதிகளவில் இருப்பு வைத்துள்ளனர். இதன் காரணமாக, எண்ணெய் வித்துக்களின் விலையில் ஏற்பட்டுள்ள கடும் விலைஉயர்வு மற்றும் வரத்து குறைவு ஆகியவை எண்ணெய்களின் விலையில் எதிரொலித்துள்ளது. தற்போது பண்டிகை சீசன் துவங்கும் நிலையில், கடலை எண்ணெய் விலை, லிட்டர் 100 ரூபாய் என்ற அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை மேலும் அதிகரிக்கும். ஆடி முடிந்து, முகூர்த்த காலம் நெருங்கி வருவதால், இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு கிருஷ்ணன் கூறினார்.



 



சென்னையில் எண்ணெய் விலை 'விர்': தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பிரணவன் கூறியதாவது: கடந்த வாரம் பாமாயில் ஒரு லிட்டர் பாக்கெட் 40 ரூபாய்க்கு விற்றது, தற்போது 47 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சன்பிளவர் ஆயில் ஒரு லிட்டர் முதல் ரகம் 57 ரூபாயில் இருந்து, 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் ரகம் 52ல் இருந்து, 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.



கடலெண்ணெய் ஒரு லிட்டர் பாக்கெட் 84 ரூபாயில் இருந்து, எட்டு ரூபாய் அதிகரித்து 92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சன்பிளவர் 15 கிலோ கொண்ட ஒரு டின் 825 ரூபாயில் இருந்து, 925 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடலெண்ணெய் ரீபைண்ட் 15 கிலோவிற்கு 1,325ல் இருந்து 1,425 ரூபாயாக உயர்ந்து விட்டது. வனஸ்பதி (டால்டா) ஒரு கிலோ பாக்கெட்டிற்கு ஐந்து ரூபாய் அதிகரித்து, 50 ரூபாயில் இருந்து 55 ரூபாயாக உயர்ந்துள்ளது. தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் முதல்ரகம் 75 ரூபாயில் இருந்து 80 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 65 ரூபாயில் இருந்து 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு பிரணவன் தெரிவித்தார்.



 



பாமாயில், சன்பிளவர் ஆகியன வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் விளைச்சல் குறைவு காரணமாக, இறக்குமதி அத்தியாவசியமாகிறது. இறக்குமதி வரி இல்லாத போதிலும் சர்வதேச சந்தையில் விலை ஏறியதால் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. சீனாவை போன்று விவசாயப் புரட்சி செய்தால் தான், எண்ணெய் விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எண்ணெய் வித்துக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us