மோசடி வழக்கில் "தலைவன்' பட தயாரிப்பாளர் மீண்டும் கைது
மோசடி வழக்கில் "தலைவன்' பட தயாரிப்பாளர் மீண்டும் கைது
ADDED : ஜூலை 12, 2013 11:23 PM
சென்னை: கரூரைச் சேர்ந்தவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு, படம் எடுக்காமல் மோசடி செய்ததுடன், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றிய வழக்கில், 'தலைவன்' பட தயாரிப்பாளரை, போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
வேலை வாங்கித் தருவதாகவும், ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக மோசடி செய்ததாகவும், சசிகலா அக்கா மகனும், 'தலைவன்' பட கதாநாயகனுமான, 'பாஸ்' என்ற பாஸ்கரனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். பாஸ்கரனை, கோர்ட் உத்தரவுப்படி, காவலில் எடுத்து விசாரித்து, நேற்று முன்தினம் மீண்டும் சிறையில் அடை த்தனர். இதற்கிடையில், 'தலைவன்' படத்தின் தயாரிப்பாளரான, மன்னார்குடியைச் சேர்ந்த சித்திரைச் செல்வனை, படங்களுக்கு துணை நடிகர்களை ஏற்பாடு செய்தவரை மோசடி செய்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, தற்போது மீண்டும் ஒரு வழக்கில், சித்திரை செல்வனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், உப்பிட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து, 47. இவர், சென்னை, போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில், '2007ல் சித்திரைச் செல்வன் அறிமுகமானார். 'ஆக்ரா' படம் தயாரிப்பதாக கூறி, 5.30 லட்சம் ரூபாய் மற்றும், ' தலைவன்' பட தயாரிப்பிற்காக, 6 லட்சம் ரூபாய் என, 11.30 லட்சம் பெற்றுக் கொண்டு, மோசடி செய்தார். பணத்தை திருப்பி கேட்டதற்கு மிரட்டினார்' என, குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதியப்பட்டு, சித்திரைச் செல்வனை மீண்டும் கைது செய்தனர். சித்திரைச் செல்வன் சிறையில் இருப்பதால், அவரை கைது செய்வதற்கான, 'வாரன்ட்' வழங்கப்பட்டது.
