ADDED : ஜன 23, 2014 12:48 AM

'தமிழகம் முழுவதும், ஏராளமான, 'டாஸ்மாக்' கடைகளை திறந்து, மாதத்திற்கு இவ்வளவு என, இலக்கு நிர்ணயித்து, மதுபானங்களை விற்பனை செய்து வரும் தமிழக அரசு, உடலுக்கு கேடு விளைவிக்காத, கள் விற்பனையை மட்டும் தடை செய்துள்ளது' என, கள் இயக்கத்தினர், சில ஆண்டுகளாக கூறி வருகின்றனர். கள் விற்பனை விஷயத்தில், தேர்தலின் போது, வாக்குறுதி அளிக்கும், அரசியல்வாதிகளும், அதன்பின், அதுபற்றி பேசுவதில்லை என்பதும், அவர்களின் மனக்குறை. விவசாயிகளுக்கு சிறந்த வருவாய் தரும், கள் விற்பனையை அனுமதிப்பது சரியா, தவறா என, இரண்டு அரசியல் பிரபலங்கள் முன்வைத்த வாதங்கள் இதோ:
'கள் உண்டவனை, உயிரோடு இருக்கும் மனிதனாக நான் கருதமாட்டேன்; அவனை செத்தவனாகவே கருதுவேன்' என, திருக்குறளில் வள்ளுவர் கூறியுள்ளார். சிலப்பதிகாரத்தில், கோப்பெருந்தேவியின், கால் சிலம்பு காணாமல் போகிறது. கண்ணகியின் சிலம்பை எடுத்துச் சென்ற கோவலனை, திருடனாக கருதி, விசாரணை நடத்திய போது, குடிகார காவலன் ஒருவன், கோவலனை வெட்டி வீழ்த்தி விடுகிறான்.
கோவலனை வெட்டியதும், கண்ணகிக்கு கோபம் வந்ததால், பாண்டியன் இறக்கிறான்; மதுரை எரிகிறது. இதற்கு காரணம் கள்ளு ஏற்படுத்திய போதை தான். ராமாயணத்தில் சீதை எங்கே இருக்கிறார் என்பதை தேடி கண்டு பிடித்து தருவேன் என, ராமனிடம் சுக்ரீவன் கூறினார். ஆனால், அவர் சொன்ன நேரத்தில் வரவில்லை, கோபத்தில் சுக்ரீவனை கண்டிக்க, லட்சுமணன் புறப்பட்டார், அப்போது, நரவு (கள்) உண்டு மறந்தேன் என, சுக்ரீவன் கூறினார். இப்படி, நேரம் தவறுவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது, கள் போன்ற போதை வஸ்துகள் தான். மகாத்மா காந்தி, ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்த போது, அவர் முன் பெண்கள் தலைவிரி கோலமாக வந்து, 'கள் குடித்து, கணவர் துன்புறுத்துகிறார்' என, கதறி அழுதனர்.
ஆயுதம் தொடாத காந்தி, கையில் கோடரி எடுத்து, கள் தரும் ஈச்சமரத்தை வெட்டினார். அவ்வளவு மோசமானது கள். பனை மரத்தில் கள் எடுத்தால், மனிதனின் உடலை வளர்க்கிற பதநீர், நுங்கு, கிழங்கு போன்றவை பனை மரத்திலிருந்து கிடைக்காது. இப்படி, பல விதங்களிலும், மனிதனின் அறிவை கள் கெடுக்கிற காரணத்தாலேயே, அதை இறக்க அனுமதிக்கக் கூடாது என, பல காலமாக சொல்லி வருகிறோம்.
குமரி அனந்தன், தமிழக காங்., முன்னாள் தலைவர்
பல நூறு கோடி ரூபாய் மானியம் கொடுத்து, வெளிநாட்டிலிருந்து, பாமாயில் இறக்குமதி செய்து, மாணவ, மாணவியரின் மதிய உணவுக்கு, தமிழக அரசு வழங்கி வருகிறது. அதேபோல், ரேஷன் கார்டுக்கு, மாதம் ஒரு கிலோ பாமாயில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெயை அரசு கொள்முதல் செய்து, மதிய உணவுக்கும், ரேஷன் கார்டுக்கும் வழங்கினால், பல லட்சம் தென்னை விவசாயிகள் பயன் அடைவர். ஆனால், மத்திய, மாநில அரசுகள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தாமல், அன்னிய நாட்டு பொருட்களை வாங்குவதால், தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தென்னை, பனை மரங்களில் இருந்து இறக்கப்படுவதில், சுண்ணாம்பு போட்டால் பதநீர். அந்த பதநீரை இரண்டு நாள் புளிக்க வைத்து குடித்தால் அதன் பெயர் கள். ஆனால், சுண்ணாம்பு இல்லாமல், இறக்க கூடியதை, தனி பதநீர் என, அழைப்பர். அதற்கு சுயம்பு என்ற பெயரும் உண்டு. இது மருத்துவ குணம் உடையது. இந்த சுயம்புக்கு தான் தென்னை விவசாயிகள் அனுமதி கேட்கின்றனர்.
கேரளாவில் பாலக்காடு உட்பட, மூன்று மாவட்டங்களில், தென்னை மரங்களில் இருந்து, நீரா (பதநீர்) இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் மரங்களுக்கு வரி கட்டி, கள் இறக்க அனுமதிக்கப்படுகிறது. கர்நாடாகாவில், கள் இறக்க அனுமதி கிடையாது. ஆனால், கள் இறக்கி விற்பனை செய்பவர்கள் மீது, கைது நடவடிக்கை எடுப்பதில்லை.தமிழகத்தில் தனி பதநீர் இறக்க, விற்க அனுமதித்தால், பல லட்சம் விவசாயிகள் பயனடைவர். மது பானங்களை குடித்து விட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை, 90 சதவீதம் குறையும்.
அப்பாவு, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,
