UPDATED : ஆக 02, 2024 12:08 AM
ADDED : ஆக 02, 2024 12:06 AM

ஹிந்துக்கள் மதமாற்றம் செய்யப்படுவதை தடுத்ததால், பயங்கரவாதிகளால் பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொல்லப்பட்டது தொடர்பாக, தமிழகம், புதுச்சேரியில் நேற்று, 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடு, அலுவலகம் என, 16 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அருகே திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 45. இவர் அப்பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். ஹிந்து மதத்தின் மீது பற்று கொண்டவர். பா.ம.க., நகரச் செயலராகவும் இருந்தார். திருவிடைமருதுார், திருபுவனம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில், ஹிந்துக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுத்து வந்தார்.
மதமாற்றம் செய்வோரை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில், 'வீடியோ' எடுத்து, சமூக வலைதளத்திலும் வெளியிட்டார். இவரை மர்ம நபர்கள், 2019, பிப்., 5ல், கொடூரமாக வெட்டிக் கொன்றனர்.
இது தொடர்பாக, திருவிடைமருதுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். பின், இந்த வழக்கு, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
என்.ஐ.ஏ., நடத்திய விசாரணையில், ராமலிங்கம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதும், அவரை கொல்வதற்கு, தேனியில் அறிவகம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. கொலையாளிகளாக, 18 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில், 13 பேர் கைது செய்யப்பட்டனர்; ஐந்து பேர் தலைமறைவாகி விட்டனர்.
இவர்களின் படங்களை வெளியிட்ட என்.ஐ.ஏ., அதிகாரிகள், இவர்கள் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, அறிவித்திருந்தனர்.
ஏற்கனவே, பலரின் வீடுகளை முன்பு சோதனை செய்தபோது சில ஆவணங்களைப் பறிமுதல் செய்திருந்த அதிகாரிகள், அதை ஆய்வு செய்தபோது, பல முக்கிய தகவல்கள் கிடைத்தன.
அதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலக்காவேரியை சேர்ந்த பி.எப்.ஐ., கிளை தலைவர் முகமது யூசுப், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் முகமது பைசல், திருபுவனத்தைச் சேர்ந்த, எஸ்.டி.பி.ஐ., கட்சி உறுப்பினர்கள் சகாபுதீன், இம்தியாஸ், பி.எப்.ஐ., மாவட்ட செயலர் முகமது ஹாலித், எஸ்.டி.பி.ஐ., கிளை தலைவர் முகமது ஹாலித் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வழக்கறிஞர் ராஜாமுகமது, திருச்சி காமராஜர் நகரில் வசிக்கும் பி.எப்.ஐ., மண்டல தலைவர் அமீர்பாஷா, முகமது சித்திக், மயிலாடுதுறை மாவட்டம், வடகரை பி.எப்.ஐ., முன்னாள் மாவட்ட செயலர் நவாஸ்கான், முன்னாள் தலைவர் முகமது பைசல் ஆகியோர் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
குத்தாலம் அருகே கருப்பூர் கிராமத்தை சேர்ந்த நவாஸ்தீன், நாகப்பட்டினம் திட்டச்சேரி முகமது ரபீக் மற்றும் புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள, பி.எப்.ஐ., முன்னாள் நிர்வாகி அஷ்ரப் அலி ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இப்படி, தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் காரைக்காலில், 16 இடங்களில் நேற்று காலை, 6:00 மணியில் இருந்து, மாலை 6:30 மணி வரை சோதனையில் ஈடுபட்டதில், மேலும் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
- நமது நிருபர் குழு -