ADDED : டிச 13, 2024 01:24 AM
சென்னை:தமிழக சுற்றுலா துறை சார்பில், சுற்றுலா பயணியரை கவர, 2015 முதல் பொங்கல் பண்டிகையின் போது, 'சர்வதேச பலுான் திருவிழா' பொள்ளாச்சியில், நடத்தப்படுகிறது.
இதைக்காண, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த, சுற்றுலா பயணியர் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் வருவர்.
அந்த வகையில், அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி, பொள்ளாச்சியில் மட்டுமின்றி, சென்னை மற்றும் மதுரையிலும், 'சர்வதேச பலுான் திருவிழா' சுற்றுலா துறை சார்பில் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து சுற்றுலா துறை அதிகாரிகள் கூறியதாவது:
பத்தாம் ஆண்டாக அடுத்த மாதம் சர்வதேச பலுான் திருவிழா நடைபெற உள்ளது.
இதுவரை பொள்ளாச்சியில் மட்டுமே நடத்தப்பட்டது. இம்முறை சென்னை, மதுரை நகரிலும் நடத்த உள்ளோம்.
ஜன., 10 முதல் 12ம் தேதி வரை, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை; ஜன., 14 முதல் 16 வரை பொள்ளாச்சி; ஜன., 18 முதல் 19ம் தேதி வரை மதுரையில், 'சர்வதேச பலுான் திருவிழா' நடைபெற உள்ளது.
இதில், 'தாய்லாந்து, பெல்ஜியம், பிரேசில், வியட்நாம், ஜப்பான், பிரான்ஸ் உட்பட ஒன்பது நாடுகளை சேர்ந்த, ராட்சத பலுான்கள் இடம்பெற உள்ளன. இவ்விழாவில், 247 தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட பலுான்களும் பறக்க விடப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.