ADDED : மே 02, 2025 04:57 AM

சென்னை: ‛ராஜ்யசபா பதவிக்காக கணக்கு போட்டு, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கவில்லை' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: ஜாதிவாரி கணக்கெடுப்பு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுக்கப்பட வேண்டியது. தாமதமானாலும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போகிறோம் என, மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு நன்றி.
எந்த பிழைக்கும் இடம் இல்லாமல், முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். ஹிந்துத்துவா சக்திகளை எதிர்க்க, தி.மு.க., உடன் கரம் கோர்த்துள்ளோம்.
கொள்கை அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி இது. ராஜ்யசபா பதவிக்காக கணக்கு போட்டு, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கவில்லை. எனவே, எந்த சூழ்நிலையிலும், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், ம.தி.மு.க., தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.