கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை; சொல்கிறார் ராமதாஸ்
கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை; சொல்கிறார் ராமதாஸ்
UPDATED : ஜன 31, 2026 07:35 PM
ADDED : ஜன 31, 2026 07:12 PM

திண்டிவனம்: 'பா.ம.க., யாருடன் கூட்டணி என்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. விரைவில் அதிகார பூர்வமாக அறிவிப்போம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க., தலைமையகத்தில், ராமதாஸ் தரப்பில் கடந்த 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை கட்சியினரிடம் இருந்து சட்டசபை தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்பட்டது. இதையடுத்து இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமைலை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய 13 மாவட்டங்களை விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடந்தது.
அப்போது ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், 'சட்டசபை தேர்தலில் பா.ம.க., சார்பில் போட்டியிடுவதற்கு 4,109 பேர் விருப்ப மனு கொடுத்தனர். இதில் முதற்கட்டமாக 13 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது. தொடர்ந்து 3 நாட்கள் நேர்காணல் நடைபெற உள்ளது.பா.ம.க.,யாருடன் கூட்டணி வைப்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. விரைவில் முடிவு செய்து அதிகார பூர்வமாக அறிவிப்போம். கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்' என்றார்.
கடந்த சில நாட்களாக தி.மு.க.,அரசை விமர்சித்து அறிக்கைகள் வெளியாவது குறித்து கேட்டதற்கு, 'அதெல்லாம் ஒன்றுமில்லை' என கூறினார். தொடர்ந்து அவரிடம், 'கடந்த காலங்களில் போட்டியிட்ட இடங்களில் வெற்றி பெற்ற மாதிரி, இந்த முறையும் போட்டியிடுவீர்களா என கேட்டதற்கு, 'நம்பிக்கை அடிப்படையில் தான் உலகமே இயங்குகிறது' என்றார்.

