நிதி நிறுவன மோசடிகளில் சட்ட விரோத 'செட்டில்மென்ட்' கூடாது: போலீஸ் எச்சரிக்கை
நிதி நிறுவன மோசடிகளில் சட்ட விரோத 'செட்டில்மென்ட்' கூடாது: போலீஸ் எச்சரிக்கை
ADDED : செப் 06, 2024 04:40 AM

சென்னை : 'சட்ட விரோதமாக பணம் மற்றும் நிலத்தை செட்டில்மென்ட் செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நிதி நிதிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் அதிக வட்டி தருவதாக, 1,167 நிதி நிறுவனங்கள், 9 லட்சத்து 13,971 முதலீட்டாளர்களிடம், 14,347 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளன. இதுகுறித்து, பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார் விசாரித்து, 665 கோடி ரூபாயை மீட்டு, 3 லட்சத்து, 98,525 பேரிடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
மேலும், 307 வழக்குகள் போலீஸ் விசாரணையில் உள்ளன. நீதிமன்ற விசாரணையில், 346 வழக்குகள் உள்ளன. பண மோசடியில் ஈடுபட்ட, 1,845 பேர் கைதாகி போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்; 1,900 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மோசடி நிதி நிறுவனங்கள், அவற்றின் இயக்குனர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் வாங்கியுள்ள, அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வங்கி கணக்குகளை முடக்கி, அதிலுள்ள கோடிக்கணக்கான ரூபாயை, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். நீதிமன்ற உத்தரவு பெற்று, முதலீட்டாளர்களுக்கு பணத்தை ஒப்படைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, முதலீட்டாளர்கள், மோசடி நிதி நிறுவனத்தார், சட்ட விரோதமாக செட்டில்மென்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது: நாங்கள் பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் யார், அவர்களின் பின்னணி மற்றும் முகவர்கள் குறித்து விசாரித்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று, மாவட்ட வருவாய் அலுவலர் வாயிலாக, பணத்தை திரும்ப ஒப்படைக்கும் பணியும் நடந்து வருகிறது. ஆனால், முதலீட்டாளர்கள் மற்றும் மோசடி நிதி நிறுவனத்தார், நிலம் மற்றும் பணத்தை சட்ட விரோதமாக செட்டில்மென்ட் செய்து கொள்வதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அப்படித்தான், ஆருத்ரா நிதி நிறுவன விவகாரம் தொடர்பாக, சென்னையில் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் மற்றும் ரவுடி ஆற்காடு சுரேசை முதலீட்டாளர்கள் அணுகி இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால், முதலீடு செய்த பணத்தில் குறைந்த அளவை மட்டுமே பெற்று, கோடிக்கணக்கில் இழந்து தவிப்பவர்கள் பாதிக்கப்படுவர்.
வழக்கு விசாரணையும் பாதிக்கும். மதுரை போன்ற இடங்களில், சட்ட விரோத செட்டில்மென்ட் குறித்து கூட்டமும் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.