எங்களை யாராலும் பிரிக்க முடியாது: செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இ.பி.எஸ்., பதில்
எங்களை யாராலும் பிரிக்க முடியாது: செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இ.பி.எஸ்., பதில்
UPDATED : மார் 17, 2025 07:00 PM
ADDED : மார் 17, 2025 06:39 PM

சென்னை:'நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது' என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு இ.பி.எஸ்., பதில் அளித்தார்.
கடந்த சில தினங்களாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் கூட்டங்களில் பங்கேற்காமல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார். இதனால் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மற்றும் செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு நிலவுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. சட்டசபை வளாகத்தில் இன்று நடந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்துவிட்டார்.
சென்னை தலைமைச் செயலகம், வளாகத்தில், இ.பி.எஸ்., நிருபர்கள் சந்திப்பில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இ.பி.எஸ்., அளித்த பதில் பின்வருமாறு:
அது உங்களுக்கு ரொம்ப அவசியமா இருக்குமான்னு கேட்கிறேன். ஏங்க எங்கள பிரிச்சு பார்க்கிறதிலேயே இருக்குறீங்க. நல்லா உஷாரா கேள்வி கேக்குறீங்க. எப்ப பார்த்தாலும், இதுல ஏதாவது குழப்பம் வருமா, என்றுதான் இருக்கீங்களே தவிர ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். நாங்கள் இப்பொழுது ஒற்றுமையா தான் இருக்கிறோம்.
யாராலும் பிரிக்க முடியாதுங்க. என்றைக்கு நான் முதல்வர் ஆனேனோ, அன்றைக்கு இருந்து, இந்த திட்டத்தை போட்டுக்கிட்டு தான் இருக்காங்க, ஆனால் அதையெல்லாம் உடைத்து எறிந்து கொண்டுதான் இருக்கிறோம். அ.தி.மு.க.,வை யாராலும் உடைக்க முடியாது. முடக்க முடியாது. அப்படி முயற்சி செய்தால் மூக்கு உடைந்து போகும். இவ்வாறு இ.பி.எஸ்., பதில் அளித்தார்.