பெண் குழந்தைகள் முதல் பெண் போலீஸ் அதிகாரி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
பெண் குழந்தைகள் முதல் பெண் போலீஸ் அதிகாரி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
ADDED : பிப் 09, 2025 01:34 PM

சென்னை: ''பெண் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை உயர் பதவியில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது.'' என தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திராவிட என்ற சொல்லுக்கே குந்தகம் விளைவிக்கும் வகையில், 'திராவிட மாடல்' என்ற பெயரில் ஒரு காட்டாட்சியை விடியா தி.மு.க.,வின் தலைவர், நிர்வாகத் திறமையற்ற பொம்மை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருவது கொதிப்படைய வைத்து உள்ளது.
இந்த ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், அஜாக்கிரதையால், சமூக விரோத செயல்களில் ஈடுபட ஆளும் தி.மு.க.,வினருக்கு கட்சிக் கொடியின் பெயரால், லைசென்ஸ் வழங்கி உள்ளதால், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களோடு, கொலை, கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களும் வரிசை கட்டி நிற்கின்றன. இதை போலீஸ் அதிகாரியே ஒத்துக் கொள்வது, தமிழக போலீசார் ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாறி உள்ளதையே காட்டுகிறது.
பெண் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை உயர் பதவியில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும் பொம்மை முதல்வரின் கைகளில் போலீஸ் துறை உள்ளது. அந்த காலத்தில் மன்னன் நகர்வலம் போவது போல, இந்த ஆட்சியின் பொம்மை முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுதும் நகர்வலம் போக ஆரம்பித்துள்ளார்.
நெல்லையில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் முதல்வரை நேரில் சந்தித்து தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை கொடுப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த நிலையில், அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க மனமில்லாத நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வரின் செயல் கண்டனத்திற்குரியது.
இத்தகைய நிர்வாகத் திறனற்ற விடியா ஸ்டாலின் மாடல் ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், வியாபாரிகள், தொழில் துறையினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் என கொதிப்பு அடைந்துள்ள அனைத்து தரப்பு மக்களும் வரும் சட்டசபை தேர்தலில் இந்த காட்டாட்சி தர்பாரை வீழ்த்த உறுதி பூண்டுள்ளனர்.பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாத பொம்மை முதல்வர், இனியாவது சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

