அப்பா பேச்சை கேட்காத மகன் என்று யாரும் சொல்லி விடக்கூடாது: அறிவுரை சொல்கிறார் உதயநிதி
அப்பா பேச்சை கேட்காத மகன் என்று யாரும் சொல்லி விடக்கூடாது: அறிவுரை சொல்கிறார் உதயநிதி
ADDED : ஜூலை 14, 2025 05:07 PM

திருச்சி: 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
திருச்சி திருவெறும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.என்.சேகரன் இல்ல திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி மணமக்களை வாழ்த்தி பேசினார்.
அப்போது உதயநிதி பேசியதாவது: மணமகன் அப்பா சொல்கிற பேச்சையும் கேட்பதில்லை. அம்மா சொல்கிற பேச்சையும் கேட்பதில்லை. தாலி கட்டும் போது அவர்கள் அம்மா சொல்கிறார். நான் பக்கத்தில் தான் இருக்கிறேன். இரண்டு முடிச்சு தான் போட வேண்டும் என்று சொல்கிறார்கள்.
மணமகனும் காதில் கேட்காத மாதிரி மூன்று முடிச்சு போட்டு விட்டார். அப்புறம்தான் தெரிகிறது மணமகள் நீங்கள் தான் மூன்று முடிச்சு போட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இப்பொழுதே அவர் நன்றாக மனைவி என்ன சொல்கிறாரோ, அதை தான் கேட்டுக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் ஒரே அடியாக மனைவி சொல்வதை மட்டும் கேட்டு நடக்காமல், அதே நேரத்தில் அப்பா அம்மாவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடக்க வேண்டும்.
அப்பா- மகன் உறவு
அரசியலில் அப்பா- பையன் (மகன்) உறவு மிக மிக முக்கியம். அப்பா பேச்சை கேட்காத பையன் என்று சொல்லி விடக்கூடாது. அந்தப் பிரச்னை எனக்கும் இருக்கிறது. மணமகனுக்கும் இருக்கிறது. இவ்வாறு உதயநிதி பேசினார். அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் என்பதை உதயநிதி வெளிப்படையாக ஒப்புக்கொண்டது அரசியல் களத்தில் பேசும் பொருளாகி உள்ளது.