காவல் துறையில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி
காவல் துறையில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி
UPDATED : டிச 19, 2025 05:05 PM
ADDED : டிச 19, 2025 03:36 PM

சென்னை: காவல்துறையில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை என்று சென்னை ஐகோர்ட் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கோவில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்குமாறும் கோரி சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஆர்டர்லிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பது நீதிமன்றம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து டிஜிபி தரப்பில், அதற்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. எந்த காவல்துறை அதிகாரிகள் தரப்பிலும், ஆர்டர்லிகள் யாரும் இல்லை என்று அப்போது அறிக்கையும் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கானது, இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து கமிஷனர்கள், எஸ்.பி.க்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியதை இருவரும் பாராட்டினர். அதே நேரத்தில், ஆர்டர்லிகளாக சீருடை காவலர்கள் பணியாற்றி வருவதாக செய்தித்தாள்களிலும், பொது தளங்களிலும் தகவல் பரவி வரும் நிலையில், யாரும் இல்லை என்று டிஜிபி கூறுவதை ஏற்க முடியவில்லை என்று கூறினர்.
அதற்கு அரசின் தரப்பில் பதிலளித்த தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, ஆர்டர்லிகள் இருப்பது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து, இந்த வழக்கில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோரை இணைத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜன.7ம் தேதிக்கு அவர்கள் தள்ளி வைத்தனர்.

