ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா?: போலீஸ் கமிஷனர் பேட்டி
ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா?: போலீஸ் கமிஷனர் பேட்டி
ADDED : ஜூலை 06, 2024 03:11 PM

சென்னை: தற்போது வரை விசாரணை நடத்தியதில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கம் அளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, நிருபர்கள் சந்திப்பில், சந்தீப் ராய் ரத்தோர் கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருந்ததாக போலீசாருக்கு எந்தத் தகவலும் வரவில்லை. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற அடிப்படையில் உளவுத்துறையினர் அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
தேர்தல் நடத்தை விதி காரணமாக போலீசாரிடம் ஒப்படைத்த துப்பாக்கியை ஜூன் 13ம் தேதியே ஆம்ஸ்ட்ராங் திரும்ப பெற்று விட்டார். ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் இருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
அரசியல் காரணங்கள் இல்லை
அடையாளம் தெரியாத சிலர் ஆம்ஸ்ட்ராங் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனர் என போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் உடனடியாக சென்று ஆம்ஸ்ட்ராங்கை மருத்துவமனை கொண்டு சென்றனர். தற்போது வரை விசாரணை நடத்தியதில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை.
இதுவரை விசாரணையில் கிடைத்த தகவல்களை மட்டுமே கூறியுள்ளோம். முழுமையான விசாரணைக்குப் பிறகே கொலைக்கான காரணம் தெரிய வரும். கொலை நடந்த 3 மணி நேரத்துக்குள் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தண்டனை
கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நிலைமை கட்டுக்குள் உள்ளது. தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு முடியும் வரை தேவையான இடங்களில் பாதுகாப்பு வழங்கப்படும். கொலைக்கான காரணம், பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.