தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லையா? சீமான் கேள்வி
தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லையா? சீமான் கேள்வி
UPDATED : ஜூலை 10, 2025 04:12 AM
ADDED : ஜூலை 09, 2025 07:36 PM

திருப்புவனம்: '' மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ., எதற்காக மாற்ற வேண்டும். தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லையா ?'', என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
போலீஸ் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் கூறினார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர். வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தாக பலர் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்படவோ, விசாரிக்கப்படவோ இல்லை. இதனால், நிகிதா மோசடி செய்து வாங்கிய பணத்தில், அவர்களுக்கும் பங்கு கொடுத்திருப்பாரோ என்று சந்தேகம் வருகிறது. இப்போதும் விசாரிக்காதது ஏன்? உண்மையில், கோவிலுக்கு அவர் நகையை கொண்டு வந்தாரா? அவர் அளித்த புகாரை விசாரிக்கவில்லை. அவர் யாரிடம் பேசினார். உனக்காக யார் பேசினார் என்பதை அவரிடம் விசாரிக்கவில்லை.
மேல் அதிகாரிகள் பிறப்பித்த உத்தவு தான் செயல்படுத்தப்பட்டது என்று, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசாரின் மனைவிகள் தெரிவித்தனர். அந்த உத்தரவு பிறப்பித்த மேல் அதிகாரி யார். இதுகுறித்து எந்த விசாரணையும் இல்லை. எந்த நடவடிக்கையும் இல்லை?.சீருடையில் இல்லாமல் போலீஸ் ஸ்டேசன் அழைத்து வராமல், கோவில் பின்புறம் வைத்து மனித உரிமையை மீறி விசாரிக்க உத்தரவிட்டது யார்?
நாங்கள் போராட அனுமதி கேட்டால், நெறிமுறைகள்பேசும் போலீசார் அதனை கடைபிடித்து இருந்தால் அஜித்குமார் இறந்திருக்க மாட்டார். எஸ்.பி.,யை தாண்டி சிறப்பு காவல்படைக்கு உத்தரவு பிறப்பித்த அதிகாரி யார்?
சி.பி.ஐ., விசரணையை முதல்வர் கேட்கிறார். காவல்துறை யார் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது?. யாரின் துறை?. யாரின் இலாகா?. முதல்வரின் கீழ் செயல்படுகிறது. உங்கள் போலீசார் மீது நம்பிக்கை இல்லையா. எதற்கு சி.பி.ஐ., விசாரணை கேட்கிறீர்கள்?. மாநில சுயாட்சி, மாநில உரிமை பேசுகிறீர்கள். உங்கள் போலீஸ் மீது நம்பிக்கை இல்லையா?சரியாக விசாரிக்கவில்லையா? உங்கள் உளவுத்துறை சரியாக இயங்கவில்லையா?.
குற்றம் வெளிப்படையாக தெரிகிறது. எப்படி நடந்தது தெரியாமல் இருக்கும்போது தான் விசாரணை. உத்தரவு பிறப்பித்தவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?. நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்த ஏமாற்றுகின்றீர்கள். எங்களை ஏமாற்றுவதற்கு தான் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்படுகிறது. சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டு எத்தனை வழக்குகளில் நீதி வழங்கப்பட்டு உள்ளது?.நான் கேட்கும் கேள்விகளை எதிர்க்கட்சிகள் கேட்கிறதா? தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? கோடநாட்டில் இறந்தவர் யார் என தெரிகிறது. கொன்றது யார்?
கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் கொடுக்கும் அரசு, போலீசாரால் அடித்து கொல்லப்பட்டால் ரூ.5 லட்சம் மட்டும் கொடுக்கப்பட்டது ஏன்? சி.பி.ஐ., விசாரணை எல்லாம் மாநில உரிமையில் வருகிறதா? அடித்துக் கொன்ற போலீசாருக்கு நீதியை நிலைநாட்ட தெரியாதா?
உண்மை குற்றவாளியை மறைக்கவே நடவடிக்கை எடுக்கின்றீர்கள். அஜித்குமாரை அடிக்க சொன்ன அதிகாரி யார்?அஜித்குமாரை அடித்து கொல்லும் அளவுக்கு நெருக்கடி கொடுத்த உயர் அதிகாரி யார்? இவ்வாறு சீமான் கூறினார்.