UPDATED : மார் 20, 2024 04:42 PM
ADDED : மார் 19, 2024 11:16 PM

சென்னை:தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகள், காலியாக உள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதி மற்றும் புதுச்சேரி லோக்சபா தொகுதியில், இன்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. வேட்பாளருடன் அதிகபட்சம் நான்கு பேரை மட்டுமே, மனு தாக்கல் செய்யும் இடத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கும், ஏப்ரல், 19 தேர்தல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
இத்தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியது. வரும், 27ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள். தினமும் காலை 11:00 முதல் மாலை 3:00 மணி வரை, வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் நடக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில், போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் துாரத்திற்குள், வாகனங்கள் நுழையாமல் இருக்க, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கலின் போது, பல்வேறு விதிமுறைகளை பின்பற்றும்படி, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

