கனிமவள கொள்ளையை தடுக்கும் விஷயத்தில் மாநில அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை: சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி
கனிமவள கொள்ளையை தடுக்கும் விஷயத்தில் மாநில அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை: சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி
ADDED : டிச 11, 2025 07:00 AM

சென்னை: 'கனிமவள கொள்ளையை தடுப்பதில், மாநில அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை' என, அதிருப்தி தெரிவித்த, சென்னை உயர் நீதிமன்றம், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை சேர்ந்தவர் நடேசன். இவர், நெக்குந்தி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுரங்கத்துறை இயக்குநர் டி.மோகன் நேரில் ஆஜரானார். அவரிடம், 'தமிழகத்தில் தொடரும் கனிமவளக் கொள்ளையை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த இயக்குநர், ''கனிம வளங்களை எடுப்பதற்கு, 'ஆன்லைன்' பதிவு முறை, ஜி.பி.எஸ்., வாயிலாக கண்காணிப்பு உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மேலும், கனிமவளங்களை சட்டவிரோதமாக திருடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது,'' என, தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது: கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது மட்டும் போதாது. இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வளங்கள், நாட்டின் கட்டமைப்புக்கு மிக முக்கியமான சொத்து. அவற்றை கொள்ளையடிக்க, ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
கனிமவள கொள்ளையர்களுக்கு, உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது இதுவரை ஏன் ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை. அரசு அதிகாரிகளே இவ்வாறு செயல்பட்டால், கனிம வள திருட்டை தடுக்கவே முடியாது. இந்த விவகாரத்தில், தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், கனிம வள கொள்ளையை தடுப்பதில், மாநில அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. இதை இப்படியே அனுமதித்தால், அது பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
மேலும், சட்டவிரோத கனிமவள கொள்ளையை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அடுத்த வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, சுரங்கத்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

