கீழ்பவானியில் முறை நீர் பாசனம் நாளை முதல் ரத்து என அறிவிப்பு
கீழ்பவானியில் முறை நீர் பாசனம் நாளை முதல் ரத்து என அறிவிப்பு
ADDED : அக் 05, 2024 12:56 AM
கீழ்பவானியில் முறை நீர் பாசனம்
நாளை முதல் ரத்து என அறிவிப்பு
ஈரோடு, அக். 5-
கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர் சங்கம் சார்பில் தலைவர் பெரியசாமி, செயலாளர் பொன்னையன், ராமசாமி உட்பட பலர், ஈரோடு நீர் வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தியிடம் நேற்று மனு வழங்கி முறையிட்டனர்.
மனுவில், 'முறைவைத்து தண்ணீர் வினியோகிக்கும் திட்டத்தை கைவிட்டு, முழு அளவில் பாசனத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும். ஒருவேளை பருவமழை அதிகமாக பெய்தாலும், அணைக்கு நீர் வரத்து அதிகரித்தாலும் கூடுதல் தண்ணீர் திறக்கவோ, முறை வைக்கவோ முடிவு செய்யலாம்' என்றனர்.
பேச்சுவார்த்தைக்குப்பின், செயற்பொறியாளர் திருமூர்த்தி கூறியதாவது: விவசாயிகளின் கருத்து கேட்காமல் முறை வைத்து தண்ணீர் திறந்ததை மறுபரிசீலனை செய்ய கேட்டனர்.
விவசாயிகள் கருத்தை ஏற்று, நாளையுடன் முறை வைக்கும் திட்டம் ரத்து செய்யப்படும். அதன் பின், விவசாயிகளை அழைத்து, கருத்து கேட்டறிந்து முடிவு செய்யப்படும்.
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திருட்டு தொடர்பாக இதுவரை, 41 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.