இனி ஆண்டுதோறும் ரூ. 2,000 கோடை கால சிறப்பு நிதி உண்டு
இனி ஆண்டுதோறும் ரூ. 2,000 கோடை கால சிறப்பு நிதி உண்டு
ADDED : பிப் 20, 2026 03:54 AM

சென்னை: ''இனி ஆண்டு தோறும், கோடை கால சிறப்பு நிதி வழங்கப்படும்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: தேர்தலை மனதில் வைத்தே, மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு, 5,000 ரூபாயை தி.மு.க., அரசு வழங்கியுள்ளது. அதில் 2,000 ரூபாய் கோடைகால சிறப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கோடை காலம் வருகிறது. ஆனால், இந்த ஆண்டு தேர்தல் வருவதால், உஷ்ணம் அதிகமாகி விட்டது என்று நினைக்கிறேன்.
தேர்தல் நடப்பதால், அடுத்த இரு மாதங்களுக்கு, மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதை தடுக்க சூழ்ச்சி நடந்தது என, கற்பனையான காரணத்தை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது, மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதை யாரும் தடுக்கவில்லை. 2,000 ரூபாய் கொடுப்போம் என சொல்லும் நாங்கள் எப்படி அதை தடுப்போம்?
அமைச்சர் கீதா ஜீவன்: 5,000 ரூபாய் வழங்கப்பட்டதற்கு அடுத்த நாள், பா.ஜ.,வைச் சேர்ந்த உபாத்யாயா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2011 தேர்தலின்போது, 'கலர் டிவி' வழங்கக் கூடாது என, நீதி மன்றம் உத்தரவிட்டது.
அதனால்தான், சூழ்ச்சியை முறியடித்து, முதல்வர் ஸ்டாலின் 5,000 ரூபாய் வழங்கியுள்ளார். கோடை கால சிறப்பு நிதி, இனி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.
பழனிசாமி: நாங்கள் சூழ்ச்சி செய்யவில்லை. மக்களை ஏமாற்ற தி.மு.க., தான் சூழ்ச்சி செய்கிறது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: நாங்கள் 5,000 ரூபாய் கொடுத்தது சூழ்ச்சி என்றால், பீஹார், மஹாராஷ்டிராவில் பா.ஜ., பணம் கொடுத்தது சூழ்ச்சி இல்லையா?
இவ்வாறு விவாதம் நடந்தது.

