தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ திமுக, அதிமுக இரண்டும் வெவ்வேறு கட்சிகள் அல்ல; திருச்சி மாநாட்டில் சீமான் பேச்சு

திமுக, அதிமுக இரண்டும் வெவ்வேறு கட்சிகள் அல்ல; திருச்சி மாநாட்டில் சீமான் பேச்சு

திமுக, அதிமுக இரண்டும் வெவ்வேறு கட்சிகள் அல்ல; திருச்சி மாநாட்டில் சீமான் பேச்சு


ADDED : பிப் 21, 2026 09:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 09:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி: 'திமுக, அதிமுக இரண்டும் வெவ்வேறு கட்சி என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். இரண்டும் ஒரே கட்சி தான். ஒரே இடத்தில் எப்படி திருடுவது என்று பயிற்சி எடுத்த கூட்டம்,' என்று சீமான் விமர்சித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். முன்னதாக, அவர் பேசியதாவது; தான் சார்ந்த ஜாதிக்காகவும், மதத்திற்காகவும், கட்சிகளுக்காகவும், கடவுளுக்காக கூடிய தமிழன், முதன்முதலாக தன் இனத்திற்காக கூடியிருக்கிறான் என்பது ஒரு படிநிலை பாய்ச்சல். எங்களின் கனவு ஆட்சி மாற்றம் அல்ல, ஆட்சி முறை மாற்றம். இங்கிருப்பது மக்களுக்கான அரசியல் இல்லை.

ஒரு அரசியல் இயக்கம் தொடர்ந்து தனித்து நின்று வளர்ந்து வருகிறது என்றால், அது நாம் தமிழர் கட்சியைத் தவிர வேறு ஏதும் இல்லை. எவரோடும் சமரசம் இல்லை. நின்ற அனைத்து தேர்தலிலும் தோற்றோம். 5வது முறையாக ஒரு அரசியல் கட்சி சீட்டுக்கும், நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து நிற்கிறது என்பது, துணைக் கண்டத்தில் நாம் தமிழர் கட்சி மட்டும் தான்.

தமிழ் எங்கே இருக்கிறது?


ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால், படைகளை குவிக்க வேண்டியதில்லை. ரத்தம் சித்தம் வேண்டியதில்லை. அந்த இனத்தின் மொழியை அழித்தால், கலை இலக்கியப் பண்பாடு அழிந்து விடும். அவன் அடையாளம் அழிந்துவிடும். அந்த இனம் அழிந்துவிடும். அப்படி, என் இனத்தை முற்றிலுமாக அழித்து, கலை, இலக்கியப் பண்பாட்டை அழித்து, என் இனத்தை அழித்து முடித்து விட்டார்கள். நாட்டில் தமிழ் இல்லை. ஏட்டில் இல்லை, அதிகாரத்தில் இல்லை. ஆட்சியில் இல்லை. பேச்சு மொழியாக இல்லை. பண்பாட்டு மொழியாக என எந்த இடத்திலும் இல்லை. தமிழ் பயிற்று மொழியாக இருந்தது, பிறகு பாட மொழியாக மாறியது. தற்போது விருப்ப மொழியாக மாறியது. எந்தத் தமிழனும் விரும்பவில்லை. நாக்கில் இல்லாத தமிழ், நாட்டில் எப்படி இருக்கும்.

தமிழோடு ஆங்கிலம் கலந்து தமிங்கலர்களாக மாறி விட்டார்கள். 1800 ஆண்டுக்கு முன்பு தமிழோடு சமஸ்கிருதம் கலந்து கன்னடர்கள், 1600ல் தமிழோடு சமஸ்கிருதம் கலந்து தெலுங்கர்கள், 15ம் நுற்றாண்டில் தமிழோடு சமஸ்கிருதம் கலந்து மலையாளிகள், பிறகு துளு. இப்படிகலந்து கலந்து நம் தாய் மொழியைப் பேசி பேசி, பல மொழிகள் தேசிய இனங்களாக பிரிந்து விட்டோம். நாம் தமிழர்கள் கிடையாது, தமிங்கலர்கள். சிதைந்து, அழிந்து கொண்டிருக்கும் தாய் மொழியை மீட்கும் உரிமை இங்கிருக்கும் ஒவ்வொரு தமிழ் பிள்ளைக்கும் உண்டு.

நஷ்டம் எப்படி?



திரைக்கவர்ச்சியா? இன எழுச்சியா? பணமா? தமிழன் என்னும் மானமிக்க இனமா? இதுதான் இந்தக் களத்தில். தமிழன் ஆளும் போது தான் தமிழ் மீளும். இறைமகன் இயேசு பிறந்த 500 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது ஆங்கிலம். 5000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழனின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியம் இருக்கிறது என்றால், நாம் எவ்வளவு தொன்மையான இனம் என்பதை உணர வேண்டும். ஆங்கிலம் ஒரு மொழி, எப்படி அறிவாகும்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு ரூ.1,000, அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.2,000. திமுக ஆட்சியில் பெண்களுக்கு இலவச பஸ், அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் இலவசம். டீசல் செலவு, ஓட்டுநர்,நடத்துநருக்கு சம்பளம், புதிய பஸ், பஸ் பழுதானால் சீரமைக்க பணம் எங்கிருந்து வரும். சகிக்க முடியாத மின்கட்டண உயர்வு இருந்தும், ஒரு லட்சம் கோடி நஷ்டம் எப்படி வருகிறது. இலவசம் கொடுப்பீர்கள். ரூ.10 லட்சம் கோடி கடன். ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம். ஆனால், ரூ.2 லட்சம் கடன் இருக்கிறது.

தனியார் மருத்துவமனைகளில் தான் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றால், முதலாளிகளிடம் அரசு தோற்று போய் விட்டதா? இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் அல்ல, வீழ்ச்சி திட்டம். இலவசத்தில் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுப்பீர்கள் என்று நாம் கேள்வி கேட்கும் போது, நீதிமன்றம் கேட்கும் போது, வாய் மூடி நிற்கின்றனர். மக்கள் வளம் மற்றும் மண்ணின் வளத்தை வைத்து தான் ரூ.10 லட்சம் கோடியை தமிழக அரசு பெற்றுள்ளது. கடன் வாங்கினாலே நீ பொருளாதார அடிமை.

ரெண்டும் ஒரே கட்சி

திமுக, அதிமுக வெவ்வேறு கட்சி என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். ரெண்டும் ஒரே கட்சி தான். ஒரே இடத்தில் எப்படி திருடுவது என்று பயிற்சி எடுத்த கூட்டம். தனித்தனியாக திருடுவார்கள். பிறகு, கூடி ஒரு இடத்தில் சேர்ந்து பிரித்துக் கொள்வார்கள். திமுகவிலும் அமைச்சர்களாக இருக்கும் 10 பேருக்கும் மேலாக அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் தான். எந்த இடத்தில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாறுபாடு இருக்கு, சொல்லுங்க. ரெண்டும் ஒரே கட்சி. இது திருடர்கள் முன்னேற்றம், அது அனைத்திந்திய திருடர்கள் முன்னேற்றம். கொஞ்சம் பெரிது.



பாஜ, காங்கிரஸ் கட்சிகளில் ஏதாவது மாறுதல் இருக்கிறதா? நீட், ஜிஎஸ்டி, என்ஐஏ போன்றவற்றை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். மோடி அதனை ஹார்லிக்ஸ், போன்விட்டா கொடுத்து வளர்த்துள்ளார். லோக் சபா தேர்தல் வந்தால், அதிமுக, திமுகவுக்கு முன்னால் பாஜ, காங்கிரஸ் நிற்கும், தமிழக சட்டசபை தேர்தல் வந்தால், அதிமுக, திமுகவுக்கு பின்னால் பாஜ, காங்கிரஸ் நிற்கும். நாங்கள் யார் தோளிலும் ஏறி பயணிக்க விரும்பவில்லை. உறு மீன் வரும் வரை கொக்கு காத்திருக்கும் , அது போல் கொக்கே காத்திருக்கும் போது, நாங்கள் புலிகள்...!, இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, ஓசி பஸ் மற்றும் திமுக நிர்வாகி மருத்துவமனையில் கிட்னி திருட்டு விவகாரங்களை பாடலாக பாடி, சீமான் தனது கட்சியினரை குஷிப்படுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us