வீடு வீடாக மருந்து கொடுத்த செவிலியர் விபத்தில் பலி அரசை கண்டித்து போராட்டம்
வீடு வீடாக மருந்து கொடுத்த செவிலியர் விபத்தில் பலி அரசை கண்டித்து போராட்டம்
ADDED : பிப் 17, 2025 07:45 AM

உடுமலை: உடுமலை அருகே, விபத்தில் உயிரிழந்த, மக்களை தேடி மருத்துவ திட்ட செவிலியர் குடும்பத்துக்கு, அரசு மற்றும் சுகாதாரத்துறையினர் எவ்வித உதவியும் வழங்காததை கண்டித்து, அரசு மருத்துவமனை முன், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பூலாங்கிணறு பகுதியில், மக்களை தேடி மருத்துவ திட்டத்தில், செவிலியராக பணியாற்றியவர் பிரியா, 32. இவர், நேற்று முன்தினம், வீடு வீடாக சென்று மருந்து வினியோகம் செய்யும் பணியில் இருந்த போது, அடையாளம் தெரியாத கார் மோதியதில், உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில், தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை தரப்பில் செவிலியர் குடும்பத்துக்கு எவ்வித உதவியும் வழங்கவில்லை எனக்கூறி, நேற்று காலை உடுமலை அரசு மருத்துவமனை முன், மக்களை தேடி மருத்துவ திட்ட செவிலியர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் திரண்டனர். தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.,) மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
செவிலியர் பிரியா உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு சுகாதாரத்துறை சார்பில் எவ்வித உதவியும் வழங்கவில்லை. அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு கூட வரவில்லை. செவிலியர் பிரியா குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் பணி பாதுகாப்பை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இப்போராட்டம் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு, கூறினார்.