ADDED : செப் 19, 2026 01:53 AM
சென்னை: தற்காலிக முறையில், 4,724 செவிலியர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர், மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், உடனடி தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மாவட்ட சுகாதார நல சங்கம் சார்பில், 4,724 செவிலியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், 11 மாத பணி முறையில், செவிலியர்கள் நியமிக்கப்படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர், நேற்று மாநிலம் முழுதும் அரசு மருத்துவமனைகள், கலெக்டர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில், ''இன்றைய சூழலில் செவிலியர்கள் தேவை இருப்பதால், மாவட்ட சுகாதார நலச் சங்கம் வாயிலாக, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கிறோம்.
''இந்த அரசு ஏற்கனவே, 2,500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்துள்ளது. படிப்படியாக மற்றவர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர். ஒருசில சங்கத்தினரை தவிர, மற்றவர்கள் இதை வரவேற்கின்றனர்,'' என்றார்.
