ADDED : பிப் 01, 2024 12:43 AM
சென்னை:தொகுப்பூதிய நர்ஸ்கள், பணி நிரந்தரம் கோரி, அரசு மருத்துவமனைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசின் சுகாதார துறையில், எம்.ஆர்.பி., என்ற மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வான, 10,000த்துக்கும் மேற்பட்ட நர்ஸ்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் பணியில் சேரும் போது, இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, அரசு உறுதியளித்தது. ஆனால், பல ஆண்டுகளாக காத்திருந்தும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
எனவே, பணி நிரந்தரம் செய்யக்கோரி, தொகுப்பூதிய நர்ஸ்கள் அனைவரும், கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணியாற்றினர். சில இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து, அரசை வலியுறுத்தும் வகையில், பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என, நர்ஸ்கள் தெரிவித்துள்ளனர்.
800 பேர் நியமனம்!
எம்.ஆர்.பி., வாயிலாக தேர்வான 2,300 நர்ஸ்களுக்கு வேலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதில், 800 பேருக்கு, அடுத்த வாரம் பணி நியமன ஆணை வழங்கப்படும். காலிபணியிடங்களுக்கு ஏற்ப, பணி நியமனங்கள் நடைபெறும்.
அதேபோல, 1,021 டாக்டர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில், அப்பணியிடங்களுக்கான ஆணையும் வழங்கப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, ஐந்து ஆண்டு களாகும் நிலையில், தற்போது தான் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது.
- மா.சுப்பிரமணியன்,
அமைச்சர், மக்கள் நல்வாழ்வு துறை.