சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
ADDED : ஜன 19, 2026 04:21 AM

தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திலும் எந்தவித பலனும் இல்லாத நிலையில், காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை முதல், சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், மாநில அளவில் ஒரு லட்சத்திற்கும் மேலான மையங்கள், ஒவ்வொன்றிலும் அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் என ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 65,000த்துக்கும் கூடுதலான பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.
இரண்டு, மூன்று மையங்களுக்கு ஒரே இடத்தில் சமைத்து, மதிய உணவு வழங்கும் நடைமுறையும் அமலில் உள்ளது. இதனால், ஊழியர்கள் பெரும் மன உளைச்சலுடன் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், இருக்கும் ஊழியர்களும், தங்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மதுரை மாவட்ட செயலர் சந்திரபாண்டி கூறியதாவது: சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7,850 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட, 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.
சில மாதங்களுக்கு முன், 72 மணிநேர உண்ணாவிரத போராட்டம் நடத்திய போது அமைச்சர்கள் பேச்சு நடத்தினர்; பலனில்லை. எனவே, நாளை காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக ஜன., 3ல் அறிவித்தோம்.
இதையடுத்து, சமூகநலத்துறை இயக்குநர் எங்களை அழைத்து பேசி, போராட்டத்தை தள்ளி வைக்க கேட்டனர். கடந்த தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்த எங்கள் கோரிக்கை குறித்து, முதல்வர் அறிவிப்பு செய்தால் ஒழிய போராட்டம் வாபஸ் கிடையாது. எனவே, பெரும்பாலான சத்துணவு மையங்கள் நாளை முதல் செயல்பட வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

