ADDED : ஜூலை 13, 2011 01:41 AM
சிவகங்கை : போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக நிலத்தை அபகரிப்பு செய்த தி.மு.க., ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டார்.
தி.மு.க., ஆட்சியில் ஏழைகளின் நிலங்களை அபகரித்தவர்களிடம் இருந்து மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க நில அபகரிப்பு பிரிவு ஒவ்வொரு மாவட்டத்திலும் துவக்கப்பட்டுள்ளது. அந்த பிரிவில் தெரிவிக்கப்படும் புகாரின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பழையனூரை அடுத்த அழகு உடையான் கிராமத்தை சேர்ந்த சங்கிலிக்கோனார் மகன் பெரியகருப்பன். இவருக்கு தஞ்சங்குளம் கிராமத்தில் ஏழரை சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை திருப்புவனம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகன், அவரது தம்பிகள் குண்டுமலை, சுப்பையா, வல்லாரேந்தல் குரூப் முன்னாள் வி.ஏ.ஓ., ஆகிய நால்வரும் சேர்ந்து 2006 பிப்., 13 ல் போலி ஆவணங்கள் மூலம் முருகன் பெயருக்கு மாற்றியுள்ளார்.
மோசடி குறித்து பெரியகருப்பன் சிவகங்கை நில அபகரிப்பு தனிப்பிரிவில் புகார் செய்தார். டி.எஸ்.பி., பால்ராஜ் தலைமையில், எஸ்.ஐ., செல்வராஜ் தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகனை கைது செய்து, மானாமதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.