டீக்கடை பெஞ்ச்: நிவாரண நிதியில் நகை வாங்கிய அதிகாரி!
டீக்கடை பெஞ்ச்: நிவாரண நிதியில் நகை வாங்கிய அதிகாரி!
ADDED : ஜன 30, 2024 01:29 AM

'உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால இன்ஸ்பெக்டரை மாத்திட்டாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''விபரமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''கரூர் மாவட்டம், வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டரா சில மாசங்கள் மட்டுமே இருந்தவர் சரவணன்... இவர், கடந்த 2011 - 14ல் ஜெயலலிதா அமைச்சரவையில் செந்தில் பாலாஜி அமைச்சரா இருந்தப்ப, பாதுகாப்பு பணியில் எஸ்.ஐ.,யா இருந்தாரு வே...
''தி.மு.க., ஆட்சியில் பிரமோஷன் கிடைச்சிட்டு... வெங்கமேடு ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டரா நியமிக்கப்பட்டாரு வே...
''லோக்சபா தேர்தல் நெருங்குறதால, இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்துட்டு இருக்காவல்லா... அந்த பட்டியல்ல, வெங்கமேடு இன்ஸ்., சரவணனை, திருச்சி லால்குடிக்கு மாத்திட்டாவ...
''இவரு செந்தில் பாலாஜியின் பாதுகாப்பு குழுவுல இருந்த தகவலை மத்திய உளவுப்பிரிவான ஐ.பி., அதிகாரிகள் மோப்பம் பிடிச்சிட்டாவ... அதான் இந்த இடமாற்றமாம் வே...'' என்றார்
அண்ணாச்சி.
''மதம், கட்சி பாகுபாடு பார்க்காம ராமர் கோவிலுக்கு அள்ளிக் கொடுத்து சபாஷ் வாங்கிட்டா ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாரை சொல்றீரு வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''ராமர் கோவில் கட்டு மானத்துக்கு, தமிழக பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் நிதி திரட்டினாளோல்லியோ... அப்ப, தி.மு.க., அமைச்சர்
செஞ்சி மஸ்தானை அவரோட விழுப்புரம் ஆத்துல சந்திச்சு பா.ஜ., நிர்வாகிகள் நிதி கேட்டா...
''அவரும் கணிசமான ஒரு தொகையை அளிக்க கொடுத்திருக்கார்... அதே மாதிரி தாம்பரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜாவும் நிதி கொடுத்திருக்கார் ஓய்...
''இவாளைப் போல இன்னும் சில தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சத்தமில்லாம நிதி கொடுத்திருக்கா... 'இதையெல்லாம் வெளியில சொல்லி விளம்பரப்படுத்த வேண்டாம்'னு பா.ஜ., நிர்வாகிகளை கேட்டுண்டாளாம் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''மழை நிவாரணத்துக்கு வசூலிச்ச நிதியில நகை வாங்கியிருக்காரு அதிகாரி ஒருத்தரு...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''போன மாசம், தமிழகத்தின் தென் மாவட்டங்கள்ல கனமழை பெஞ்சு மக்கள் பாதிக்கப்பட்டாங்கல்ல... இதுக்காக, பெரம்பலுார் யூனியனில் உள்ள, 20 பஞ்சாயத்திலும் தலா 10,000 முதல் 20,000 ரூபாய் வரை பஞ்சாயத்துக்கு ஏற்ற மாதிரி தலைவர்களிடம் நிதி வசூலிச்சாங்க...
''மொத்தம் வசூலான தொகையில வெறும் 80,000 ரூபாய்க்கு மட்டும் நிவாரண பொருட்களை வாங்கிட்டு, மீதி இருந்த 3.20 லட்சம் ரூபாய்க்கு திருச்சி நகைக்கடையில் நகை வாங்கிக்கிட்டாராம்,
அந்த அறிவான அழகான பெரிய அதிகாரி...
''வாங்கி வச்ச நிவார ணப் பொருட்களை ஆட்டையப் போட வேப்பூர் யூனியனில் சிலர் திட்டம் போட்டாங்க... இந்த விஷயம் மாவட்ட உயரதிகாரிக்கு தெரிஞ்சுபோனதால, வேற வழியில்லாம நிவாரண பொருட்களை அனுப்பி வச்சாங்களாம்...'' என்றார் அந்தோணிசாமி.
''எரியுற வீட்டுல, புடுங்குற வரை லாபமுன்னு இப்படி செய்யுறாங்களே பா...'' என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.