அனுமதியின்றி சினிமா ஷூட்டிங்; நடிகர் சூர்யா படக்குழுவை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
அனுமதியின்றி சினிமா ஷூட்டிங்; நடிகர் சூர்யா படக்குழுவை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
ADDED : பிப் 20, 2025 12:03 PM

சென்னை: உரிய அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட நடிகர் சூர்யாவின் சினிமா படப்பிடிப்பு, அரசு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
நடிகர் சூர்யா, தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் துவங்கிய படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் ஸ்வாசிகா, யோகி பாபு, ஷிவதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களை நடிக்கின்றனர்.
சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வெளிச்சை எனும் பகுதியில் 'சூர்யா 45' படத்திற்கான படப்பிடிப்பு நடத்துவதாக இருந்தது. இதற்கான படப்பிடிப்பு கருவிகளுடன் படக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். இதனையறிந்த அதிகாரிகள் அந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்ததில், உரிய அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவது தெரியவந்தது.
படப்பிடிப்பு நடத்த அதிகாரிகள் தடை விதித்த அதிகாரிகள், உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துமாறு ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சூர்யாவுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

