ஜாபர் சாதிக் தம்பிகளுக்கு அடைக்கலம் தந்தால் வழக்கு என்.சி.பி., அதிகாரிகள் எச்சரிக்கை
ஜாபர் சாதிக் தம்பிகளுக்கு அடைக்கலம் தந்தால் வழக்கு என்.சி.பி., அதிகாரிகள் எச்சரிக்கை
UPDATED : மார் 21, 2024 03:24 AM
ADDED : மார் 21, 2024 01:04 AM

சென்னை:'திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் சகோதரர்களுக்கு அடைக்கலம் தருவோர் மீது, வழக்குப்பதிவு செய்யப்படும்' என, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தி.மு.க., அயலக பிரிவு முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 35, கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.
அவரது சகோதரரும், வி.சி., முன்னாள் நிர்வாகியுமான முகமது சலீம், 28, மற்றொரு சகோதரரும், அமீர் இயக்கி வரும், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தின் நடிகருமான மைதீன், 23, ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
அவர்களை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். குடியுரிமை அதிகாரிகள் வாயிலாக இருவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லவில்லை என, உறுதி செய்யப்பட்டு உள்ளது.
எனினும், விமான நிலையங்களுக்கு, 'லுக் அவுட்' நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக், முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோரின் கூட்டாளிகள் 23 பேர், தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
காவல் விசாரணையில், ஜாபர் சாதிக்கிடம், 10 நாட்கள் விசாரித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
முகமது சலீம், மைதீன் ஆகியோர் பதுங்கி இருக்கும் இடங்கள் குறித்து ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு அடைக்கலம் தருவோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும்.
முகமது சலீம் நெருங்கிய நட்பு வட்டத்தில், சென்னையைச் சேர்ந்த வி.வி.ஐ.பி.,யின் மகன் இருப்பதும், அவரும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
அதுபற்றியும் ரகசிய விசாரணை நடக்கிறது. முகமது சலீம், மைதீன் ஆகியோர் விரைவில் சிக்குவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

