1538 டன் அரிசியை வீணாக்கிய அதிகாரிகள்: சட்டசபை குழு ஆய்வில் அதிர்ச்சி
1538 டன் அரிசியை வீணாக்கிய அதிகாரிகள்: சட்டசபை குழு ஆய்வில் அதிர்ச்சி
ADDED : ஆக 21, 2025 12:20 PM

தஞ்சாவூர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் சட்டசபை குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், 1538 டன் அரிசியை அதிகாரிகள் வீணாக்கியது அம்பலமானது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு சட்டசபை குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இங்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படும் அரிசி மூட்டைகள் இருப்பு வைக்கப்படுவது வழக்கம். இன்று காலை, சட்டசபை உறுப்பினர்கள் அடங்கிய பொது நிறுவனங்களின் ஆய்வு குழுவினர் இந்த கிடங்குக்கு வந்தனர்.
இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளின் தரத்தை ஆய்வு செய்தனர். அதில் கடந்த 2022ம் ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட 1,538 டன் அரிசி, மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றதாக இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த அரிசியை கால்நடை தீவனத்துக்கு வழங்க, சட்டசபை குழுவினர் பரிந்துரை செய்தனர். மேலும், இருப்பு வைத்த அரிசியை உரிய காலத்தில் மக்களுக்கு வினியோகம் செய்யாமல், அதன் தரம் குறைவதற்கு காரணமான அதிகாரிகளை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழுவினர் தெரிவித்தனர். அதன்படி அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று குழுவின் தலைவரும், எம்எல்ஏவுமான நந்தகுமார் தெரிவித்தார்.