ADDED : செப் 28, 2024 02:45 AM

சென்னை: பதினைந்து ஆண்டுகளை கடந்துள்ள வாகனங்களை, கடந்த ஆண்டு ஏப்ரல் 1க்கு பின் பயன்படுத்த, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்தது.
மேலும், இந்த வகை வாகனங்களுக்கான பதிவுச்சான்றை, 'வாகன்' இணையதளம் வாயிலாக ரத்து செய்தும் நடவடிக்கை எடுத்தது.
இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் தடைபடுவதை தடுக்கும் வகையில், 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை மேலும் ஓராண்டு பயன்படுத்த, தமிழக அரசு அனுமதி வழங்கியது.
அந்த அனுமதி வரும் 30ம் தேதியுடன் முடிகிறது.
இந்நிலையில், மேலும் ஓராண்டு பயன்படுத்த அனுமதித்து, தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
மாநிலத்தில், 15 ஆண்டுகளுக்கு மேலாக 6,247 அரசு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இவற்றின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்யும்பட்சத்தில், ஏராளமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே, அரசு பஸ்கள் உட்பட அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான 15 ஆண்டுகளுக்கு மேலான 6,247 வாகனங்களுக்கு வரி, கட்டணம் போன்றவற்றை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேரடியாக வசூலித்து, பதிவுச்சான்றை புதுப்பித்து வழங்கலாம்.
அந்த வாகனங்களின் பதிவுச்சான்று செல்லுபடியாகும் காலத்தை, அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.