
ஜனவரி 22, 1925
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், வேங்கடராம அய்யர் - லெட்சுமி தம்பதியின் மகனாக, 1925ல், இதே நாளில் பிறந்தவர் கோபாலய்யர். இவர், திருவையாறு அரசர் கல்லுாரியில், 'புலவர்' பட்டம், அண்ணாமலை பல்கலையில், பி.ஓ.எல்., பட்டம், மதுரை தமிழ் சங்கத்தில், 'பண்டிதர்' பட்டம் உள்ளிட்டவற்றை பெற்றார்.
திருப்பனந்தாள் செந்தமிழ் கல்லுாரியில் தமிழ் பேராசிரியர், திருவையாறு அரசர் கல்லுாரியில் முதல்வர் பொறுப்புகளை வகித்தார். சங்க இலக்கியங்களை மனப்பாடமாய் சொல்லும் ஆற்றல் பெற்ற இவர், கல்லுாரி மாணவர்களுக்கு புத்தகத்தை பார்க்காமல் கற்பித்தார்.
ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளையும் அறிந்த இவர், புதுச்சேரி, பிரெஞ்சு - இந்தியா ஆய்வு நிறுவனத்தில் ஆய்வாளர், பதிப்பாளராகவும் பணியாற்றினார். தஞ்சை சரஸ்வதி மஹால் நுாலகத்தில் இருந்த இலக்கண ஓலைச்சுவடிகளை பதிப்பித்தார்.
தமிழ் இலக்கண பேரகராதியை, 18 தொகுதிகளாக வெளியிட்டார். 'மணிமேகலை' காவியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'பெரியபுராணம், கம்பராமாயணம்' போன்றவற்றில் தொடர் சொற்பொழிவாற்றினார். தமிழக அரசின், திரு.வி.க., மற்றும் கபிலர் விருதுகளை பெற்ற இவர், தன், 82ம் வயதில், 2007, ஏப்ரல் 1ல் மறைந்தார்.
'தமிழ்நுாற்கடல்' தி.வே.கோ., பிறந்த தினம் இன்று!