PUBLISHED ON : மே 12, 2025 12:00 AM

மே 12, 1912
நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம், வழுவூர் கிராமத்தில், 1912ல், இதே நாளில் பிறந்தவர், வி.ஆர்.கோவிந்தராஜ பிள்ளை. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, தாய் மாமா திருவிடைமருதுார், பி.எஸ்.வீருசாமியிடம் வளர்ந்தார். சிமிழி சுந்தரம், மாயவரம் பூதலிங்கம் உள்ளிட்டோரிடம் கர்நாடக இசையை கற்றார். இவரின் பாட்டை கேட்ட கும்பகோணம் ராஜமாணிக்கம், இவருக்கு வயலின் இசை கற்றுக் கொடுத்தார்.
இவர் வயலின் வாசித்த அரியக்குடி ராமானுஜர், மகாராஜபுரம் விஸ்வநாதர், ஆலத்துார் சகோதரர்கள், ஜி.என்.பாலசுப்பிரமணியம், சித்துார் சுப்பிரமணியம் உள்ளிட்டோரால் பாராட்டப்பட்டார்.
திருவனந்தபுரம் அரண்மனை வித்வானாக இருந்தபோதும், பாடகர்களுக்கு வயலின் வாசிக்கவே விரும்பினார். இவரின் இசைத்திறமையால் ஈர்க்கப்பட்ட, 'திவான்' சி.பி.ராமசாமி அய்யர், இவரை, அண்ணாமலை பல்கலை இசைக்கல்லுாரி தலைவராக நியமித்தார். தமிழக அரசின், 'கலைமாமணி' மற்றும் தமிழிசை சங்கம், இசைப்பேரறிஞர் உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன், 67வது வயதில், 1979, பிப்ரவரி 11ல் மறைந்தார்.
வயலின் கலைஞர் பிறந்த தினம் இன்று!

