PUBLISHED ON : மே 26, 2025 12:00 AM

மே 26, 1844
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகில் உள்ள வையச்சேரியில், துரைசாமி அய்யர் - அருந்ததி தம்பதியின் மகனாக, 1844ல், இதே நாளில் பிறந்தவர், 'மகா' வைத்தியநாத அய்யர்.
இவர், தன் தந்தையிடம், கர்நாடக இசையை கற்றார். தொடர்ந்து, தியாகராஜரின் நேரடி சீடரான, வெங்கட சுப்பய்யரிடம் கற்றார். தன் ஏழாம் வயதிலேயே, ராகம், பல்லவி பாடும் திறமையுடன் வளர்ந்த இவர், சங்கீதம் தொடர்பான, 'சங்கிரக சூடாமணி, சங்கீத ரத்னாகரம்' உள்ளிட்ட நுால்களை ஆராய்ந்து தெளிந்தார்.
புதுக்கோட்டை ராமச்சந்திர தொண்டைமான் தர்பார், ராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் தர்பார், எட்டையபுரம் அரண்மனை, திருநெல்வேலி சிதம்பரப்பிள்ளை பஜனை மடம் உள்ளிட்டவற்றில் சங்கீத ஆலாபனைகளை செய்து புகழ் பெற்றார்.
'சங்கீத ரத்னாகரம்' எனும் நுாலில் உள்ள, 'சக்கரவாகம்' என்ற ராகத்தை, வித்வான்கள் முன்னிலையில் பாடி, பெருமை பெற்றார். அப்போது இவருக்கு, சுப்பிரமணிய தேசிகர், 'மகா' எனும் பட்டத்தை வழங்கினார். பல ஊர்களுக்கு சென்று, சிவகதைகளையும், சங்கீதத்தையும் இணைத்து, ஹரிகதை செய்தார். இவர் தன், 49வது வயதில், 1893, ஜனவரி 27ல் மறைந்தார்.
பிரபல சங்கீத வித்வான் பிறந்த தினம் இன்று!

