
மே 31, 1964
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில், 1909 ஏப்ரல் 4ல் பிறந்தவர் பி.ஆர்.மாணிக்கம்.
இவர், ஆற்காடு மிஷன் உயர் நிலைப் பள்ளியில் படித்தார். தொடர்ந்து, பெங்களூரில், அரசு பொறியியல் கல்லுாரியில் கட்டடவியல் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றார். அப்போதைய மைசூரு மாகாண அரசில் இளநிலை பொறியாளராக சேர்ந்து, மாநகராட்சி பொறியாளராக உயர்ந்தார்.
நீர்ப்பாசன திட்டங்களை அறிந்து வர, கர்நாடக அரசால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். சிகாகோவில் நகர வடிவமைப்பு மற்றும் கட்டட கலையில் முதுநிலை பட்டம் பெற்று நாடு திரும்பி, கர்நாடக அரசுக்காக பல பிரமாண்ட கட்டடங்களை வடிவமைத்து கட்டினார்.
அப்போதைய கர்நாடக முதல்வர் கெங்கல் ஹனுமந்தையா, நாட்டின் மிகப்பெரிய சட்டசபையை கட்ட திட்டமிட்டு, அந்த பணிக்கு இவரை நியமித்தார். தமிழக கோவில்களில் உள்ள திராவிட கட்டட கலை மரபுகளை சேர்த்து, 'விதான் சவுதா'வை, நான்கு ஆண்டுகளில் கட்டி முடித்தார். இவர், தன் 55வது வயதில், 1964ல் இதே நாளில், வேலுாரில் காலமானார்.
கர்நாடகாவின் தலைமை செயலகத்தை கட்டிய தமிழரின் நினைவு தினம் இன்று!

