
நவம்பர் 11:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகில் உள்ள சாலியமங்கலத்தில், கர்ணம் பஞ்சாபகேச அய்யர் - மீனாட்சி தம்பதிக்கு மகளாக, 1911ல், இதே நாளில் பிறந்தவர், டி.பி.ராஜலட்சுமி.
இவருக்கு, 8 வயதில் திருமணமாகி, வரதட்சணை கொடுமையால் கணவனால் கைவிடப்பட்டு, தந்தையும் இறந்ததால், தாயுடன் திருச்சி சென்றார். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக்குழுவில் சேர்ந்து, 'பவளக்கொடி' நாடகத்தில் நடித்தார்.
தொடர்ந்து, கே.எஸ்.செல்லப்பா மற்றும் கே.பி.மொய்தீன் சாகிப் நாடக குழுக்களில் நடித்தார். வி.ஏ.செல்லப்பாவுடன் இவர் நடித்த நாடகங்கள் பாராட்டு பெற்றன. நாடகங்களில் இவர் பாடிய தேசபக்தி பாடல்களுக்காக, பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார்.
கீசகவதம் எனும் முதல் மவுனப்படம், குறத்தி பாட்டும் பரதமும் என்ற முதல் குறும்படம், காளிதாஸ் எனும் முதல் பேசும் படம் ஆகியவற்றிலும் நாயகி யாக நடித்து வரலாற்றில் இடம்பெற்றார். கோவலன் படத்தில் மாதவி வேடம் ஏற்றார். தொடர்ந்து, உஷா சுந்தரி, ராஜேஸ்வரி உள்ளிட்ட படங்களில் நடித்து, சினிமா ராணியானார்.
'ஸ்ரீ ராஜம் டாக்கீஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் துவக்கி, மிஸ் கமலா படத்தை இயக்கியவர், தன் 53வது வயதில், 1964, ஆகஸ்ட் 20ல் காலமானார்.
இவரது பிறந்த தினம் இன்று!

