PUBLISHED ON : ஜன 27, 2026 01:15 AM

ஜனவரி 27: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே மேல்புதுப்பாக்கத்தில், அண்ணாமலை -- அலமேலு தம்பதிக்கு மகனாக, 1890ல் இதே நாளில் பிறந்தவர், முனுசாமி எனும் சகஜானந்தர்.
சொந்த ஊரில் துவக்க கல்வியை முடித்து, திண்டிவனம் அமெரிக்கன் ஆற்காடு கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, பைபிளை மனப்பாடமாக ஒப்பித்தார். இதற்காக, 'சிகாமணி' பட்டம் வழங்கிய நிர்வாகம், சில நிபந்தனைகளுடன் அமெரிக்காவுக்கு அனுப்புவதாக கூறியது.
நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால், எட்டாம் வகுப்பை முடிக்க விடாமல் வெளியேற்றப்பட்டார். பின், குடும்பத்துடன் கர்நாடக மாநிலம், கோலார் தங்கவயலில் வேலை செய்தார். அங்கு, ஆன்மிக நுால்களை கற்றும், நீலமேக சுவாமிகளின் ஆன்மிக உரைகளை கேட்டும் வளர்ந்தார்.
சென்னை வியாசர்பாடி குருகுலத்தில் பணியாற்றிய இவருக்கு, 'சுவாமி சகஜானந்தர்' என பெயர் சூட்டி, சிதம்பரத்துக்கு கல்வி சேவை செய்ய அனுப்பினார், கரப்பாத்திர சுவாமி. நன்கொடை திரட்டி, சிதம்பரத்தில் நந்தனார் பெயரில் பள்ளி, விடுதிகளை கட்டி, கல்வி சேவை செய்தார். 1947, 1952, 1957ம் ஆண்டுகளில் சிதம்பரம் எம்.எல்.ஏ.,வாகி, அப்பகுதி வளர்ச்சிக்கு பாடுபட்டவர், தன், 69வது வயதில், 1959, மே 1ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!

