PUBLISHED ON : மார் 09, 2026 01:33 AM

மார்ச் 9, 2003
தேனி மாவட்டம், கோம்பையில், வீ.பரமசிவம் பிள்ளை - காமாட்சி தம்பதியின் மகனாக, 1915, செப்டம்பர் 5ல் பிறந்தவர் வீ.ப.கா.சுந்தரம்.
நாவலர் சோமசுந்தர பாரதியாரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும், ராமநாதபுரம் அரசவை கவிஞரான சங்கரசிவத்திடம் முறையாக இசை, தாள நுணுக்கங்களையும் குழல், முழவு போன்ற கருவிகளையும் இசைக்க கற்றார். பின், சென்னை, மதுரை பல்கலைகளில் வித்வான், முனைவர் பட்டங்களை பெற்றார்.
மதுரை அமெரிக்கன் கல்லுாரி, மதுரை பல்கலை தமிழ் துறைகளில் பணியாற்றினார். சங்கரதாஸ் சுவாமிகளின் இசை நாடகங்களால் ஈர்க்கப்பட்ட இவர், தமிழ் இசையின் வேர்களை, சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம், பஞ்சமரபு நுால்களில் ஆராய்ந்தார்.
கிரேக்க - தமிழ் இசை தொடர்புகளையும் ஆராய்ந்தவர், கிறிஸ்துவ மதத்துக்கு மாறினார். 'தமிழிசை வளம், தமிழிசை கலை களஞ்சியம் - 4 தொகுதிகள்' உள்ளிட்ட நுால்களில், இசை, நாட்டியம், இசை கருவிகள், பாடலை இயற்றியோர் வரலாறு, பாடல்களின் தோற்றம், வளர்ச்சி, தாளக் கட்டு, அவற்றை படிக்கும் முறை உள்ளிட்ட நுணுக்கங்களை விரிவாக விளக்கினார்.
இவர், தன், 88வது வயதில், 2003ல், இதே நாளில் மறைந்தார்.

