PUBLISHED ON : மே 10, 2026 12:00 AM

மே 10: கர்நாடக மாநிலம் உடுப்பியில், உணவக நிர்வாகியான ராமமூர்த்தி - வாக்தேவி தம்பதியின் மகனாக, 1956ல் இதே நாளில் பிறந்தவர் மோகன்.
பெங்களூரு நேஷனல் பள்ளி மற்றும் கல்லுாரியில் படித்தார். அப்போதே தையல், ரேடியோ மெக்கானிசம், உணவக வேலைகளை கற்றார். உணவகத்திற்கு அடிக்கடி வந்த கராந்த் என்பவர், மோகனை கன்னட நாடக நடிகராக்கினார்.
இயக்குநர் பாலு மகேந்திரா, கோகிலா என்ற கன்னட படத்திலும், மூடுபனி என்ற தமிழ் படத்திலும் இவரை நடிகராக்கினார். சாந்தமான தோற்றம், காதலில் குழையும் நடிப்பால், ரசிகையர் பட்டாளத்தை ஈர்த்தார். இவரது நடிப்பில் வெளியான, நெஞ்சத்தை கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை, விதி, ரெட்டைவால் குருவி, மவுன ராகம், கோபுரங்கள் சாய்வதில்லை, உதய கீதம், உயிரே உனக்காக உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றியடைந்தன.
பல படங்களில் பாடகராக நடித்து, 'மைக்' மோகன் ஆனார். குறைந்த பட்ஜெட் படங்களின் வெள்ளி விழா நாயகனாக வலம் வந்த இவருக்கு, இன்று 70வது பிறந்த நாள்!
