தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சம் வழக்குகளுக்கு தீர்வு
தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சம் வழக்குகளுக்கு தீர்வு
ADDED : டிச 15, 2025 02:54 AM

சென்னை: மாநிலம் முழுதும் நேற்று முன்தினம் நடந்த, தேசிய லோக் அதாலத்தில், ஒரு லட்சத்து, 3,884 வழக்குகளில், 857 கோடியே 77 லட்சத்து, 65,260 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு வரும் வகையில், ஆண்டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
அதன்படி, தேசிய அளவில் நேற்று முன்தினம் லோக் அதாலத் நடந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆறு அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் மூன்று அமர்வுகளும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்தன.
மாவட்டம், தாலுகா அளவில், நீதிபதிகள் தலைமையில் மாநிலம் முழுதும், 516 அமர்வுகள் அமைக்கப்பட்டன.
நிலுவையில் இருந்த 96,358 வழக்குகள்; நீதிமன்ற விசாரணைக்கு வராத, 7,526 வழக்குகள் என, மொத்தம் ஒரு லட்சத்து, 3,844 வழக்குகளுக்கு இந்த அமர்வுகள் தீர்வு கண்டுள்ளன.
இதன் வாயிலாக, 857 கோடியே 77 லட்சத்து, 65, 260 ரூபாய் வரை இழப்பீடுகள் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத்தில், 20,239 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, 224 கோடியே 23 லட்சத்து, 36,567 ரூபாய் வரை இழப்பீடுகள் வழங்கப்பட்டு உள்ளதாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

