ஒரு ஆவணப்பதிவுக்கு ஒரு லட்சம் ரூபாயா; போலீசை வாய் பிளக்க வைத்த லஞ்ச வேட்டை!
ஒரு ஆவணப்பதிவுக்கு ஒரு லட்சம் ரூபாயா; போலீசை வாய் பிளக்க வைத்த லஞ்ச வேட்டை!
ADDED : அக் 27, 2024 02:00 PM

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் வேட்டையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பொறுப்பு சார் பதிவாளர், ஆவண எழுத்தர், ஆவண பதிவுக்கு வந்த நபர் ஆகிய மூவர் மீது வழக்கு பதியப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் திடீர் சோதனை நடத்தினர். போலீசார் சென்றபோது, பொறுப்பு சார் பதிவாளர் சீனிவாசன் இருக்கையில் இருந்தார். அங்கிருந்த தனி நபர்கள் 16 பேரையும் தனித்தனியாக அழைத்து போலீசார் விசாரித்தனர். அவர்களில் ஒருவரான கருணாகரன் என்பவர், ஒரு லட்சம் ரூபாய் வைத்திருந்தார்.
பத்திரப்பதிவு முடிந்த பிறகு, நிலம் விற்பனை செய்பவருக்கு கொடுப்பதற்கு வைத்திருப்பதாக கூறினார். அவரது ஆவணத்தில், ஏற்கனவே முழுத்தொகையும் நிலம் விற்பனை செய்பவருக்கு வழங்கப்பட்டதாக இருந்தது. இதனால் அவர் கூறிய விளக்கம், போலீசாருக்கு ஏற்புடையதாக இல்லை. சார் பதிவாளருக்கு லஞ்சம் தருவதற்காக கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், போலீசார் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.சார் பதிவாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட அறையினுள் போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்த மர அலமாரியில் ஏராளமான கோப்புகள் வைக்கப்பட்டிருந்தன.
அவற்றில், கோப்புகளுக்கு அடியில் கற்றையாக வெள்ளை தாளில் சுற்றி வைக்கப்பட்ட பணம் மொத்தம், 46,500 ரூபாய் இருந்தது. அந்த பணத்தை பற்றி பொறுப்பு சார் பதிவாளரிடம் கேட்டபோது, 'தனக்கு எதுவும் தெரியாது' என்றார்.
பொதுமக்கள் வர அனுமதியற்ற, அலுவலர்கள் மட்டுமே சென்று வரும் அந்த அறையில் இருந்த பணம் பற்றி, அங்கிருந்த அனைவரும், 'தங்களுக்கு தெரியாது' என்று சாதித்தனர்.இதையடுத்து, அந்தப்பணம், லஞ்சப்பணம் என்று கருதி கைப்பற்றப்பட்டது.
அருகேயிருந்த ஆவண எழுத்தர் சுஜாதா அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீசார், உரிய முகாந்திரம் இல்லாத 53,500 ரூபாயை கைப்பற்றினர்.
பொது ஊழியரான பொறுப்பு சார் பதிவாளர் சீனிவாசன், ஆவண எழுத்தர்களிடம் இருந்தும், இடைத்தரகர்களிடம் இருந்தும், லஞ்சம் பெற்றுக் கொண்டதற்கு முகாந்திரம் இருப்பதால், அவர் மீது வழக்கு பதியப்பட்டது. அதேபோல், தனி நபரான கருணாகரன், ஆவண எழுத்தர் சுஜாதா ஆகியோர், சார் பதிவாளருக்கு லஞ்சம் கொடுக்கும் நோக்கத்துடன் பணம் வைத்திருந்து பிடிபட்டனர். இதற்கு உரிய முகாந்திரம் இருப்பதாக கருதிய போலீசார், அவர்கள் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.