ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்: தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிக பயன்!
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்: தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிக பயன்!
ADDED : பிப் 13, 2026 10:54 PM

நமது நிருபர்
தமிழகம் உட்பட நாடு முழுவதும் வசிக்கும் பலர் வேலைக்காக பிற மாநிலங்களில் வசிக்கின்றனர். இடம்பெயரும் தொழிலாளர்கள் பயன்பெற மத்திய அரசு 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை, 2020 ஜனவரியில் துவக்கியது.
இத்திட்டதின் கீழ், எந்த மாநிலத்தை சேர்ந்த முன்னுரிமை மற்றும் அந்தியோதயா பிரிவு ரேஷன் கார்டுதாரர்களும், தாங்கள் வசிக்கும் மாநில ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமையை வாங்கிக் கொள்ளலாம். இத்திட்டம் 'மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது' என, தமிழகத்தில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன. அத்திட்டத்தில் அந்தாண்டு அக்டோபரில் தமிழகம் இணைந்தது.
பீஹார், ஜார்க்கண்ட், உ.பி., ஒடிஷா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் வேலைக்காக தங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது தமிழகத்தை சேர்ந்தவர்கள், பிற மாநிலங்களில் வசிப்பது குறைவு. அதேசமயம் ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பயன்பெற்று வருகின்றனர்.
தமிழக ரேஷன் கார்டுதாரர்களில் இம்மாதத்தில் நேற்று வரை 667 பேர், ஜனவரியில் 595; 2025 டிசம்பரில் 667; நவம்பரில் 522; அக்டோபரில் 325 பேர் பிற மாநிலங்களில் பொருட்கள் வாங்கியுள்ளனர். தமிழகத்தில் வசிக்கும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களில் இம்மாதத்தில் இதுவரை 71 பேர், ஜனவரியில் 55; 2025 டிசம்பரில் 71; நவம்பரில் 63; அக்டோபரில் 95 பேர் மட்டுமே பொருட்களை வாங்கியுள்ளனர்.

