ஆக்கப்பூர்வமான செயலில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஈடுபடணும்; அமைச்சர் அறிவுரை
ஆக்கப்பூர்வமான செயலில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஈடுபடணும்; அமைச்சர் அறிவுரை
ADDED : ஜூன் 19, 2026 10:36 PM

சென்னை: ''வார்த்தை விளையாட்டுகளை கைவிட்டு, ஆக்கப்பூர்வமான செயலில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஈடுபட வேண்டும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.
சட்டசபையில் கவர்னர் உரை மீது நடந்த விவாதம்: தி.மு.க., - சிவசங்கர்: முதல்வர் விஜய்க்கு பிடித்த திரைப்பட இயக்குநர் அட்லி, சிறந்த படங்களில் உள்ள காட்சிகளை எடுத்து போட்டு, 'ஹிட்' கொடுப்பார். அதே போன்று, முந்தைய ஆட்சியில் இருந்த சிறந்த திட்டங்களை எல்லாம் வேறொரு பரிமாணத்தில் கவர்னர் உரையில் வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த ஆட்சியை விமர்சிக்கக்கூடாது என்கின்றனர். புதிய திட்டங்களை தீட்டுவதற்கும், அதை செயல்படுத்துவதற்கும் தான் ஆறு மாத அவகாசம் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார். மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு ஆறு மாத அவகாசம் கிடையாது.
த.வெ.க., அரசின் கூட்டணி கட்சிகள் தான் இப்போது போராட்டத்தை அறிவித்துள்ளன. கோவை, கும்மிப்பூண்டியில் நாங்கள் போராடவில்லை; மக்கள் தான் போராட்டம் நடத்துகின்றனர்.
உங்களை போல எங்களையும் நம்பியே மக்கள் ஓட்டளித்தனர். மக்களின் குரலை ஒலிப்பவர்களாக நாங்கள் இருப்போம்; காலம் மாறும்; காட்சிகள் மாறும்.
அமைச்சர் ராஜ்மோகன்: திரைப்படங்களில் நடித்து, மக்கள் பணிக்கு முதல்வர் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலில் இருக்கும் எம்.எல்.ஏ.,வான இவர், 'எடிட்டிங்' பற்றியும், திரைப்பட இயக்குநர் அட்லி குறித்தும் பேசியது ஆச்சரியமாக இருந்தது; அதிர்ச்சியாகவும் இருந்தது. சட்டசபைக்கும், அட்லிக்கும் என்ன சம்பந்தம்?
ஜனநாயகத்தின் பெரிய பலம் எதிர்க்கட்சிகள் தான். உண்மை தன்மை பற்றி தெரிந்தும், வம்புக்கு பேசுவது சரியல்ல; காலங்கள், காட்சிகள் மாறியதை தான் இந்த சட்டசபை எடுத்துக் கூறுகிறது.
வார்த்தை விளையாட்டுகளை கைவிட்டு, ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபட வேண்டும்.தி.மு.க., - சிவசங்கர்: எனக்கு அட்லி பற்றியும் தெரியும்; அமைச்சர் நடத்திய, 'புட்சட்னி யூ டியூப் சேனல்' பற்றியும் தெரியும். கருணாநிதி எழுதிய, 'பராசக்தி' பட வசனம் தான் இன்று வரை பேசப்படுகிறது. திரைப்படத்தில் உள்ள முக்கிய செய்திகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த அரசிடம், 'ஆக் ஷன்' படத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். எதிர்க்கட்சியாக இருந்த போது, ஆக் ஷன் பேசியவர், பொறுப்புக்கு வந்ததும் அடக்கி வாசிக்கிறார். அவர் பொதுக் கூட்டங்களில் பேசியதற்கு எல்லாம் பதில் சொல்வதை, நாங்கள் இங்கு தவிர்க்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
