தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தி.மு.க.,வில் சேர வந்த அழைப்புக்கு ஓ.பி.எஸ் மறுப்பு!

தி.மு.க.,வில் சேர வந்த அழைப்புக்கு ஓ.பி.எஸ் மறுப்பு!

தி.மு.க.,வில் சேர வந்த அழைப்புக்கு ஓ.பி.எஸ் மறுப்பு!


UPDATED : பிப் 22, 2026 07:38 PM

ADDED : பிப் 22, 2026 02:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 22, 2026 07:38 PM ADDED : பிப் 22, 2026 02:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் --

தன் ஆதரவாளர்கள் சிலருக்கு, 'சீட்' ஒதுக்கும்படி, முதல்வர் ஸ்டாலினிடம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விடுத்த கோரிக்கைக்கு, தி.மு.க., சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி கூறப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பன்னீர்செல்வம், தி.மு.க.,வில் சேரும்படி வந்த அழைப்பையும் ஏற்க மறுத்துள்ளார்.

இதற்கிடையே, தன்னுடன் இணைந்து செயல்படுமாறு பன்னீர்செல்வத்திற்கு, சசிகலா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு., தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற அமைப்பை துவக்கி, அ.தி.மு.க.,வுக்கு உரிமை கோரி வருகிறார்.

கடந்த 2017ல், முதல்வராக இருந்த பழனிசாமியுடன், தன்னை சேர்த்து வைத்தது போல், மீண்டும் பா.ஜ., தலைமை சேர்த்து வைக்கும் என, பன்னீர்செல்வம் நம்பிக்கையுடன் இருந்தார்.

கைவிட்ட பா.ஜ., ஆனால், பா.ஜ., வேண்டுகோளை ஏற்று, தினகரனின் அ.ம.மு.க.,வை கூட்டணியில் சேர்த்துக் கொண்ட பழனிசாமி, பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை சேர்க்க மறுத்துவிட்டார். பா.ஜ.,வும் அவர்களை கைவிட்டது.

தனிக்கட்சி துவக்கினால், அ.தி.மு.க.,வில் உரிமை கோர முடியாது என்பதால், பன்னீர்செல்வத்திற்கு அடுத்து என்ன செய்வது என தெரியாத நிலை ஏற்பட்டது.

அவருடனிருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோர், தி.மு.க.,வில் இணைந்து விட்டனர். ராஜ்யசபா எம்.பி., தர்மர், பழனிசாமியை சந்தித்து, அ.தி.மு.க.,வுக்கு சென்று விட்டார். முன் னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க., என்ற புதிய கட்சியை துவக்கி உள்ளார்.

இதனால் தனித்து விடப்பட்டுள்ள பன்னீர்செல்வம், தி.மு.க., கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

அதை உறுதிப்படுத்தும் வகையில், அவரது ஆதரவு எம்.எல்.ஏ., அய்யப்பன், சட்டசபையில் மீண்டும் ஸ்டாலின் முதல்வராக வருவார் என பேசினார். நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலினை, சட்டசபை வளாகத்தில் பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார் .

அப்போது நடந்த பேச்சு மற்றும் அவருக்கு சசிகலாவிடமிருந்து வந்த அழைப்பு குறித்து, அவரது ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது:

அ.தி.மு.க.,வில் மீண்டும் சேர வாய்ப்பில்லை. பா.ஜ.,வும் கைவிட்டது. த.வெ.க., உடன் கூட்டணி அமைக்கலாம் என்றால், விஜயை சந்திப்பதே சிரமமாக உள்ளது. எனவே, தி.மு.க., கூட்டணியில் தன் ஆதரவாளர்களுக்கு 'சீட்' பெற்றுத்தர, பன்னீர்செல்வம் விரும்பினார். அதற்காக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

அப்போது, பன்னீர்செல்வத்தை தி.மு.க.,வில் சேருங்கள் என, முதல்வர் அழைத்துள்ளார். கட்சியில் சேர்ந்தால், பழனிசாமி போல் இடையூறு தர மாட்டோம்; உரிய கவுரவம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆதரவாளர்கள் அதற்கு பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க.,வில் மூன்று முறை முதல்வராக இருந்த நிலையில், தி.மு.க.,வில் இணைவது சரியாக இருக்காது' என கூறி, முதல்வர் அழைப்பை மறுத்துள்ளார்.

அதேநேரம் இந்த தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. என் ஆதரவாளர்கள் நான்கு பேருக்கு, எங்கள் அமைப்பு சார்பில் போட்டியிட, 'சீட்' வழங்குங்கள் என, கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு, 'உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும்' என, முதல்வர் கூறியுள்ளார்.

இதனால், அதிருப்தி அடைந்த பன்னீர்செல்வம், யோசித்து கூறுவதாகக் கூறிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், 'நான் முதல்வராக்கிய பழனி சாமி, என்னை கட்சியில் சேர்க்க முடியாது என்கிறார்; அவருக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்டுவேன்' என கூறி சசிகலா, தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார்.

தேர்தலில் போட்டியிட விரும்பும் தன் ஆதரவாளர்களிடம், தன் வீட்டில் தினமும் நேர்காணல் நடத்தி வருகிறார்.

ஏற்கனவே திவாகரன் துவக்கிய அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சி வாயிலாக, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, சசிகலா முயற்சித்து வருகிறார்.

வரும் தேர்தலில், தனக்கு விசுவாசமாக இருந்து, தன்னால் பதவி பெற்று, இப்போது கண்டுகொள்ளாமல் இருக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், காமராஜ் உள்ளிட்டோரை தோற்கடிக்க, சசிகலா முடிவு செய்துள்ளார்.

இப்பணியில், தன்னுடன் இணைந்து செயல்படும்படி, பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோர் த.வெ.க., உடன் இணைந்து களம் இறங்கினால், தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.,வுக்கு கடும் சிக்கல் ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us