பட்டாசு விபத்துக்கு சிகிச்சை தயாராக இருக்க உத்தரவு
பட்டாசு விபத்துக்கு சிகிச்சை தயாராக இருக்க உத்தரவு
ADDED : அக் 26, 2024 03:37 AM

சென்னை: 'தீபாவளியின் போது பட்டாசு விபத்துக்கள் ஏற்பட்டால் சிகிச்சையளிக்கும் வகையில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் தயாராக இருக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தீபாவளி போன்ற பண்டிகையில், தீக்காயங்கள் ஏற்படுவது வாடிக்கை. எனவே, குழந்தைகளை பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கச் செய்ய வேண்டும். வெடிகளை திறந்த வெளியில் வெடிக்க வேண்டும். அதன் அருகாமையில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் இல்லாததை உறுதி செய்வது அவசியம்.
பட்டாசு விபத்துக்கள் ஏற்பட்டால், அதற்கு மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் அனைத்திலும், தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளை போதிய அளவில் வைத்திருப்பது அவசியம்.
போதிய அளவு ரத்த அலகுகள் வைத்திருக்க வேண்டும். ஒட்டுறுப்பு சிகிச்சை நிபுணர்களை தயார் நிலையில் பணியில் இருக்கச் செய்ய வேண்டும். ஏதேனும் பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், உடனே பொது சுகாதாரத்துறைக்கு, 94443 40496, 87544 48477 என்ற எண்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.