தாமதமாகும் ப்ரிபெய்டு டோலி; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தாமதமாகும் ப்ரிபெய்டு டோலி; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : டிச 10, 2024 03:40 AM
சபரிமலை : டோலி சுமக்கும் தொழிலாளர்களுக்கும் தேவசம் போர்டுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் ப்ரிபெய்டு டோலி அமல்படுத்த முடியாமல் உள்ளது. இதற்கிடையில் பம்பை பஸ் ஸ்டாண்டில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு டோலி வழங்குவது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வயது மூத்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோய்வாய் பட்டவர்கள் சபரிமலை செல்வதற்காக டோலி பயன்படுத்தப்படுகிறது. பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல ஒரு வழிக்கு 3 ஆயிரம் ரூபாயும், சன்னிதானம் சென்று திரும்பி பம்பை வர (இருவழிக்கு) 6000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனுடன் தேவசம் போர்டுக்கு தலா 250 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார் காரணமாக ப்ரிபெய்டு டோலி கொண்டுவர தேவசம் போர்டு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.
ஆனால் டோலி தொழிலாளர்களுக்கும் தேவசம்போர்டுக்கும் இடையே இன்னும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. எடை தூக்கி அதற்கேற்ற கட்டணம் என்பதை தொழிலாளிகளில் ஒரு பகுதியினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஒரு பகுதியினர் ஏற்கவில்லை.
பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல மட்டும் 80 கிலோ வரை 4 ஆயிரம், 100 கிலோ வரை 5 ஆயிரம், 100 கிலோவுக்கு மேல் 6 ஆயிரம் என புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. சன்னிதானம் சென்று திரும்புவதற்கு முறையே 8 ஆயிரம், 10 ஆயிரம், 12 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தலா 250 ரூபாய் தேவசம்போர்டுக்கு செலுத்த வேண்டும்.
தங்களது கோரிக்கைகளை தேவசம்போர்டு கேட்கத் தயாராக இல்லை என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர். பத்து நாட்களுக்கு ஒரு முறை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என தேவசம் போர்டு கூறுகிறது. இதை மாற்றி உடனுக்குடன் பணத்தை தங்கள் கணக்கில் செலுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையில் பம்பை பஸ் ஸ்டாண்டில் இறங்கிய ஒரு மாற்றுத்திறனாளிக்கு டோலி கிடைக்காமல் சிரமப்பட்டதும், பின்னர் பம்பை கணபதி கோவில் அருகே இருந்து போலீஸ் உதவியுடன் டோலி கொண்டுவரப்பட்டு அந்த பக்தர் அழைத்துவரப்பட்டதும் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பம்பை பஸ் ஸ்டாண்டில் இறங்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு எவ்வகையான வசதி செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி சபரிமலை போலீஸ் ஒருங்கிணைப்பு அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

