ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மோர் பாக்கெட் வழங்க உத்தரவு
ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மோர் பாக்கெட் வழங்க உத்தரவு
ADDED : மார் 24, 2025 06:14 AM

சென்னை : 'தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு, மோர் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும்' என, போக்குவரத்து கழக கிளை மேலாளர்களுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அரசு பணிமனைகளில் உள்ள பணியாளர்களுக்கும், பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கும், மோர் பாக்கெட்டுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பஸ் நிலையங்கள், நேர கண்காணிப்பாளர் அறைகள், உணவகம், ஓய்வறைகள் உள்ளிட்ட இடங்களில், போதுமான குடிநீர், மோர் உள்ளிட்டவற்றை ஊழியர்கள் அணுகும் இடத்தில் வைக்க வேண்டும்.
தரமான குடிநீர் வழங்க, ஆர்.ஓ., இயந்திரங்களை பராமரிக்க வேண்டும். ஓட்டுநர், நடத்துநர் போன்றோரை, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, தண்ணீர் குடிக்க சொல்ல வேண்டும்.
ஓ.ஆர்.எஸ்., பொட்டலங்களை அவர்களுக்கு வழங்கி, நீர்ச்சத்து குறையும் நேரங்களில் அருந்தும்படி அறிவுறுத்த வேண்டும். தலையில் தொப்பி அணிய வேண்டும். வெயில் காரணமாக, தலைவலி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டால், உடனே தெரிவிக்க வேண்டும்.
முதலுதவி பெட்டிகளை வைத்திருக்க வேண்டும். பஸ்களில் உள்ள ரேடியேட்டர் உள்ளிட்டவற்றின் வெப்பத்தை பரிசோதித்து, அதில் குறைகள் இருந்தால் உடனே சரிசெய்ய வேண்டும் என, கிளை மேலாளர்களுக்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.