ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றிலும் விதிமீறல் கட்டடங்களை அகற்ற உத்தரவு
ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றிலும் விதிமீறல் கட்டடங்களை அகற்ற உத்தரவு
ADDED : ஜூலை 06, 2025 04:15 AM

மதுரை: திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றிலும் உள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கில், 'சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். சட்ட நடைமுறைகளை பின்பற்றி அகற்ற வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கரூர் குளித்தலை மகுடீஸ்வரன் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலைச் சுற்றிலும் ஒரு கி.மீ., பரப்பளவில் 9 மீ., உயரத்திற்கு மேல் கட்டடங்கள் அமைக்கக்கூடாது. இது அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதை மீறி பல்வேறு கட்டடங்கள் சட்டவிரோதமாக எழுப்பப்பட்டுஉள்ளன. இவை கோயில் கோபுரத்தை மறைக்கும் வகையில் உள்ளன.
விதிமீறல் கட்டடங்களை அகற்றக் கோரி தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர், அறநிலையத்துறை கமிஷனர், திருச்சி கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனோன்மணி ஆஜரானார்.
அரசு பிளீடர் திலக்குமார், கோயில் தரப்பு வழக்கறிஞர் வினோத் ஆஜராகி தெரிவித்ததாவது: மாநகராட்சி உதவியுடன் அனுமதியற்ற கட்டுமானங்கள் அடையாளம் காணப்படும். சட்டம், விதிகள்படி கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். சட்ட நடைமுறைகளை பின்பற்றி அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றப்பட வேண்டும் என்பதை குறிப்பிடத் தேவையில்லை. இதை 12 வாரங்களில் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.