அடுத்த இலக்கு 2026 தேர்தல் வெற்றி: முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!
அடுத்த இலக்கு 2026 தேர்தல் வெற்றி: முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!
UPDATED : செப் 18, 2024 04:10 AM
ADDED : செப் 17, 2024 07:53 PM

சென்னை: ''அடுத்து நம் இலக்கு 2026 சட்டசபை தேர்தல். எந்த கட்சியும் இதுவரை பெறாத வெற்றியை தி.மு.க., பெற்றுள்ளது எனும் அளவுக்கு தொண்டர்கள் உழைக்க வேண்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க., முப்பெரும் விழா, நேற்று சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்தது. விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., வெள்ளி விழா, பொன்விழா கொண்டாடியபோது, தி.மு.க., ஆட்சியில் இருந்தது. பவள விழாவிலும் ஆட்சியில் உள்ளோம். நுாற்றாண்டு விழாவிலும் தி.மு.க., ஆட்சியில் இருக்கும். தி.மு.க., தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு உள்ளது. கடந்து வந்த 75 ஆண்டுகளில், எத்தனையோ சாதனைகளை செய்துள்ளோம்.
தமிழகத்தை நோக்கி, இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளோம். எந்த மாநில அரசும், ஒரு மாநிலத்திற்கு இத்தனை நன்மைகள் செய்து தந்ததில்லை எனக் கூறும் அளவுக்கு, தி.மு.க., அரசு, தமிழகத்தை வளமிக்க மாநிலமாக மேம்படுத்தி உள்ளது.
எனினும், நம்முடைய எல்லாக் கனவுகளும் நிறைவேறவில்லை. மாநில உரிமைகளை வழங்க, ஒரு மத்திய அரசு அமையவில்லை. நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு, இன்னமும் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். இப்படிப்பட்ட நெருக்கடிக்கு இடையில், தமிழகத்தை எல்லாவற்றிலும் முன்னேற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு தி.மு.க., நடைபோடுகிறது. மாநில சுயாட்சி கொள்கை, நம் உயிர் நாடி கொள்கையில் ஒன்று. இப்போதுள்ள சூழலில் மாநில சுயாட்சியை வென்றெடுக்க வேண்டும்.
குறைவான நிதியை வைத்து, இவ்வளவு சாதனை செய்ய முடிகிறது என்றால், முழுமையான நிதி கிடைத்தால், எல்லாவற்றிலும் தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றிக் காட்ட முடியும். அதிகாரம் கொண்டவர்களாக மாநில அரசை மாற்ற, அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான முன்னெடுப்பை, தி.மு.க., செய்யும். மாநில உரிமைகளுக்காக, மாநில சுயாட்சி கொள்கைக்காக குரல் கொடுப்போம்.
நான் தலைமைப் பொறுப்பேற்று எதிர்கொண்ட தேர்தல் அனைத்திலும், வெற்றி பெற்றுள்ளோம். அடுத்தடுத்து நடக்க உள்ள தேர்தலிலும் வெற்றி பெற உள்ளோம். ஆணவத்தோடு கூறவில்லை; உங்கள் மீதுள்ள நம்பிக்கையில் கூறுகிறேன். அடுத்து நம் இலக்கு, 2026 தேர்தல். இதுவரை இத்தகைய வெற்றியை எந்த கட்சியும் பெற்றதில்லை என, 2026ல் வரலாறு சொல்ல வேண்டும். அந்த வரலாறை எழுத நீங்கள் தயாரா? இந்த உணர்வு வெற்றி சரிதமாக மாற, முப்பெரும் விழாவில் சபதம் ஏற்போம்! இவ்வாறு அவர் பேசினார்.
விருதாளர்கள் கவுரவிப்பு
கருணாநிதி அறக்கட்டளை சார்பில், சிறப்பாக பணியாற்றிய, தி.மு.க., நிர்வாகிகள் 17 பேருக்கு, விருது, சான்றிதழ், 1 லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது. பெரியார் விருது அறிவிக்கப்பட்ட பாப்பம்மாளுக்கு பதிலாக, அவரது பேத்தி ஜெயசுதா விருது பெற்றுக் கொண்டார்.
அறந்தாங்கியைச் சேர்ந்த மிசா ராமநாதனுக்கு, அண்ணா விருது; எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு, கலைஞர் விருது; கவிஞர் தமிழ்தாசனுக்கு, பாவேந்தர் விருது; வி.பி.ராஜனுக்கு, பேராசிரியர் விருது; முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்திற்கு, மு.க.ஸ்டாலின் விருது வழங்கப்பட்டன.
ஏ.ஐ., தொழில்நுட்பம்
முதல்வர் ஸ்டாலின் அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமர்ந்து வாழ்த்துரை வழங்குவது போன்ற காட்சி, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.